
பிரதமர் மோடியின் 11 ஆண்டுகால ஆட்சி நிறைவைக் குறிக்கும் வகையில் ஒரு செய்தியாளர் சந்திப்பைக் கூட இதுவரை நடத்தவில்லை என காங்கிரஸ் எம்.பி.யும், கட்சியின் தகவல் தொடர்புப் பிரிவின் பொதுச் செயலாளருமான ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்திருக்கிறார்.
இது தொடர்பாக அவர் தன் எக்ஸ் பக்கத்தில், “பிரதமரின் 11 ஆண்டுகால பதவிக்காலம் நிறைவடைந்ததை முன்னிட்டு, எழுத்துப்பூர்வமற்ற, தயாரிக்கப்பட்ட கேள்விகளல்லாத முதல் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்த முடியுமா என சவால் விட்டோம்.
ஆனால், பிரதமர் மோடி பத்திரிக்கையாளர்களைக் கண்டால் ஏன் ஓடிப்போகிறார்? கேள்விகள் இன்னும் தயாரிக்கப்படவில்லையா? அல்லது தயாரிக்கப்பட்ட கேள்விகளை கேட்கும் பத்திரிக்கையாளர்களை இன்னும் கண்டுபிடிக்கவில்லையா? ஒருவேளை பதிலளிக்கும் பாரத் மண்டபம் இன்னும் தயாராகவில்லையோ? உலகில் உள்ள ஒவ்வொரு அரசின் தலைவரும் அவ்வப்போது சுதந்திரமான பத்திரிகையாளர் சந்திப்பை நடத்துகிறார்கள்.
ஆனால் இந்தியாவில் 11 ஆண்டுகளாக அப்படி எதுவும் இல்லை. மோடி கடந்த ஆண்டு தேர்தல் பிரசாரத்தின் போது ஸ்கிரிப்ட் செய்யப்பட்ட பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றை நடத்தினார். அதில்தான் நான் மனிதப் பிறவியல்ல எனப் பேசி பிரபலப்படுத்த முயன்றார். அது இல்லாமல் அவர் வேறு எந்த பத்திரிகையாளர் சந்திப்பையும் நடத்தத் துணிந்ததில்லை. ஒவ்வொரு மாதமும் பத்திரிகையாளர் சந்திப்புகளை நடத்தி, அவரிடம் கேள்விகளை முன்வைக்க வேண்டும். அதுதான் நமது ஜனநாயக அடித்தளங்கள் நிறுவப்படுவதற்கான ஒரு வழி” என்றார்.