• June 10, 2025
  • NewsEditor
  • 0

ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாக ஜூன் 3-ம் தேதி ஆர்.சி.பி அணி ஐபிஎல் கோப்பையைக் கைப்பற்றியது. அடுத்தநாளே, கர்நாடக மாநில அரசும், மாநில கிரிக்கெட் சங்கமும் ஆர்.சி.பி வீரர்களைச் சிறப்பிக்க அவசர அவசரமாக நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தது.

அதன்படி, ஜூன் 4-ம் தேதி பெங்களுருவில் ஆர்.சி.பி-யின் வெற்றிக் கொண்டாட்டத்தின்போது சின்னசாமி ஸ்டேடியதுக்கு வெளியே கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஆர்.சி.பி வெற்றிக் கொண்டாட்டம்

ஒருபக்கம் இந்த விவகாரத்தில் மாநில அரசுக்கும், கிரிக்கெட் சங்கத்துக்கும் நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்றம் உத்தரவிட, மறுபக்கம் உயிரிழந்தோர்களுக்கு அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட தலா ரூ. 10 லட்சம் இழப்பீட்டுத் தொகையை தலா ரூ. 25 லட்சமாக உயர்த்தினார் முதல்வர் சித்தராமையா.

மேலும், ஆர்.சி.பி அணியின் நிர்வாகம் மீது காவல்துறை எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து சில நிர்வாகிகளைக் கைதுசெய்ய, இன்னொருபக்கம் மாநில கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் சங்கர், பொருளாளர் ஜெய்ராம் ஆகியோர் தாமாக முன்வந்து பதவியை ராஜினாமா செய்தனர்.

இவ்வாறான சூழலில், கூட்ட நெரிசல் உயிரிழப்புகள் சம்பந்தப்பட்ட வழக்கு உயர் நீதிமன்றத்தில் நாளை மீண்டும் விசாரணைக்கு வரவிருக்கிறது.

இந்த நிலையில் முதல்வர் சித்தராமையா, “கிரிக்கெட் ஸ்டேடியத்தை வேறு இடத்திற்கு மாற்றுவது குறித்து அரசாங்கம் பரிசீலிக்கும்.

இத்தகைய விரும்பத்தகாத சம்பவம் எந்த அரசாங்கத்திலும் நடக்கக்கூடாது. இந்த வழக்கில், காவல்துறை அதிகாரிகள் 5 பேர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், உளவுத்துறைத் தலைவர், முதலமைச்சரின் அரசியல் செயலாளர் மாற்றப்பட்டுள்ளனர்.

சித்தராமையா
சித்தராமையா

இவ்வழக்கு தீவிரமாக எடுத்துக்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. அரசு இதில் எந்தத் தவறும் செய்யவில்லை. இந்தச் சம்பவம் வருத்தமளிக்கிறது.

அதேவேளையில் அரசு நிர்வாகம் எந்தத் தவறான நடவடிக்கையும் எடுக்கவில்லை. குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எனவே, இதில் அரசாங்கத்துக்கு எந்த அவமானமும் இல்லை. கும்பமேளாவின்போது கூட்ட நெரிசலில் மக்கள் இறந்தபோது உத்தரப்பிரதேச முதல்வர் ராஜினாமா செய்தாரா?

அப்போது பா.ஜ.க மற்றும் ஜே.டி.எஸ் அத்தகைய ராஜினாமாவைக் கோரியதா?

சின்னசாமி ஸ்டேடியம்
சின்னசாமி ஸ்டேடியம்

மாநில கிரிக்கெட் சங்கத்தின் செயலாளரும் பொருளாளரும்தான் என்னை நிகழ்ச்சிக்கு அழைத்தனர்.

இந்த நிகழ்ச்சியை நாங்கள் ஏற்பாடு செய்யவில்லை, அவர்கள்தான் ஏற்பாடு செய்தார்கள். எனக்கு மட்டும்தான் அழைப்பு விடுத்தார்கள்.

பிறகு, ஆளுநரும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வார் என்று அவர்கள் தெரிவித்தனர். நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்டேனே தவிர, அதைத் தாண்டி வேறேதும் எனக்குத் தெரியாது.” என்று கூறினார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *