
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர், சித்தம்பூண்டி பகுதியைச் சேர்ந்தவர் சாமியாத்தாள்(67). இவரது கணவர் இறந்து விட்டார். வீட்டின் அருகில் உள்ள சொந்தத் தோட்டத்தில் விவசாயம் செய்து தனியாக வசித்து வருகிறார்.
சாமியாத்தாளுக்கு, கிருஷ்ணமூர்த்தி என்ற மகனும், கிருஷ்ணவேணி என்ற மகளும் உள்ளனர். கிருஷ்ணமூர்த்தி கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கிருஷ்ணவேணி, திருமணமாகி கணவருடன் மணியனூரில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு தோட்டத்து வீட்டின் வெளியே உறங்கிக் கொண்டிருந்த சாமியாத்தாளை, நள்ளிரவில் அங்கு வந்த மர்ம நபர்கள் நகை, பணம் கேட்டு மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
சாமியாத்தாள் கூச்சலிட்டதால் மர்ம நபர்கள் கத்தியால் கழுத்து மற்றும் வாயில் சரமாரியாகக் குத்தி விட்டுத் தப்பி ஓடியுள்ளனர். சாமியாத்தாள் தனது செல்போனை எடுத்து பக்கத்து வீட்டுக்காரர் குழந்தைவேலுக்கு போன் செய்துள்ளார். ஆனால் அவரால் பேச முடியவில்லை.
இதனால் சந்தேகமடைந்த பக்கத்து வீட்டு குழந்தைவேலு உடனடியாகச் சென்று பார்த்தபோது சாமியாத்தாள் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், நல்லூர் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்துள்ளார்.
தகவலின் பெயரில் விரைந்து வந்த நல்லூர் காவல்துறையினர் சாமியாத்தாளை மீட்டு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், சாமியாத்தாள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
நகை, பணத்திற்காக மூதாட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் நாமக்கல்லில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சேலம் சரக டிஐஜி உமா, நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் ஆகியோர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொடர்ந்து, அந்தப் பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

பரமத்தி வேலூர் காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையில் எட்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலையில் தொடர்புடைய மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இதுகுறித்து சேலம் சரக டிஐஜி உமாவிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, “கொலையில் ஈடுபட்டவர்களைத் தனிப்படை அமைத்து தீவிரமாகத் தேடி வருகிறோம். இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் எந்தக் குற்ற வழக்குகளுடனும் பொருந்தவில்லை. குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகிறோம். விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள்” என்று கூறினார்.