
ஸ்வீடனைச் சேர்ந்த காலநிலை செயற்பாட்டாளர் கிரேட்டா தன்பெர்க், இஸ்ரேலின் தடையை உடைத்து காசா மக்களுக்கு மனிதநேய உதவிப்பொருட்களை எடுத்துச்சென்றார்.
இந்த மாத தொடக்கத்தில் அவரது கடல் பயணம் ஆரம்பித்தது. நேற்றைய தினம் இஸ்ரேல் படைகள் அவரது படகை தடுத்து நிறுத்தி, இஸ்ரேலுக்குக் கொண்டுசென்றன. இப்போது அவருக்கு என்ன ஆனது, இஸ்ரேல் எடுத்த நடவடிக்கைகள் என்ன என்பதை விவரமாகப் பார்க்கலாம்.
காசாவுக்குப் பயணம்!
ஃப்ரீடம் ஃப்ளோட்டிலா கூட்டணியின் (FCC) மேடலின் என்ற கப்பலில் கிரேட்டா தன்பெர்க், கேம் ஆஃப் த்ரோன்ஸ் நடிகர் லியாம் கன்னிங்ஹாம், ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட 12 நாடுகளைச் சேர்ந்த 12 சர்வதேச செயற்பாட்டாளர்கள் சென்றனர்.
கடந்த சில மாதங்களாக வெளியுலகில் இருந்து காசாவுக்கு நிவாரண உதவிகள் சென்று சேருவதைக் கடுமையாகக் கட்டுப்படுத்தியுள்ளது இஸ்ரேல்.
இதனால் உலகிலேயே பசிக்கொடுமை அதிகம் உள்ள பகுதியாக காசாவை அறிவித்தது ஐநா சபை. இந்த நிலையில் பால், புரோட்டீன் பார்கள், பேபி ஃபார்முலா, டயப்பர்கள், மாவு, அரிசி, நீர் வடிகட்டிகள், சுகாதாரப் பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய உதவிப்பொருட்களை படகில் எடுத்துச் சென்றனர் கிரேட்டா தன்பெர்க் குழுவினர்.
“எங்களை விடுவிக்க அழுத்தம் கொடுங்கள்” – Greta Thunberg
நேற்று இரவில் இவர்களது கப்பலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது இஸ்ரேல் படை. இதனை எதிர்பார்த்து இந்த குழுவினர் முன்னரே ரெக்கார்ட் செய்துவைத்த வீடியோக்கள் வெளியிடப்பட்டன.
கிரேட்டா தன்பெர்க், இஸ்ரேல் அரசாங்கம் தங்களை கடத்திச் செல்வதாகவும், தனக்கு ஆபத்து இல்லாமல் மீட்க ஸ்வீடன் அரசுக்கு தோழர்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் அதில் பேசியிருந்தார். இதே போல ஒவ்வொரு நாட்டைச் சேர்ந்த செயற்பாட்டாளர்களும் பேசியிருந்தனர்.
செல்ஃபி படகு… ஷோ முடிந்தது!
நேற்று இரவு செயற்பாட்டாளர்கள் உயிர் காக்கும் ஜாக்கெட்டுகளை அணிந்து கொண்டு படகில் இருக்கும் வீடியோவை இஸ்ரேல் வெளியுறவுத் துறை வெளியிட்டது.
ஆரம்பம் முதலே கிரேட்டா தன்பெர்க் குழுவினர் அடையாளமாகவே இந்த பயணத்தை மேற்கொள்வதாகவும், ஹமாஸுக்கு உதவுவதாகவும் குற்றம் சாட்டி வந்தது இஸ்ரேல்
சமூக வலைத்தளத்தில் மேட்லீன் கப்பலை ‘செல்ஃபி படகு’ என விமர்சித்துள்ளது இஸ்ரேல் வெளியுறவுத்துறை. கடந்த 2 வாரங்களில் இஸ்ரேல் வழியாக 1200க்கும் மேலான லாரிகள் மூலம் காசாவுக்கு உதவிப்பொருட்கள் அனுப்பப்பட்டதாகவும், மேட்லீன் கப்பலில் வந்த உதவிகள் மிக மிக குறைவான அளவு என்றும் கூறியுள்ளனர்.
செயற்பாட்டாளர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் பாதுகாப்பாக இருப்பதாகவும், “ஷோ முடிந்துவிட்டது” என்றும் அறிவித்தது.
Good morning to all our followers ☀️
In case you missed it:
The ‘selfie yacht’ is safely making its way to the shores of Israel. The passengers are safe and were provided with sandwiches and water, and are expected to return to their home countries.
The tiny amount of… pic.twitter.com/Gfn9I3ZI2l
— Israel ישראל (@Israel) June 9, 2025
மேலும் அவர்கள் கொண்டு சென்ற நிவாரணப் பொருட்கள் ‘உண்மையான’ மனிதாபிமான வழிகள் மூலம் காசாவுக்கு அனுப்பப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.
இப்போது எங்கிருக்கிறார் கிரேட்டா தன்பெர்க்?
இஸ்ரேலின் நடவடிக்கையை கண்டித்துள்ளது ஃப்ரீடம் ஃப்ளோட்டிலா கூட்டணி. “மேட்லீன் கப்பல் சட்டவிரோதமாகக் கடத்தப்பட்டுள்ளது. அதிலிருந்த நிராயுதபாணியான மக்கள் வலுக்கட்டாயமாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளனர். பேபி ஃபார்முலா, உணவுப் பொருட்கள், மருந்துகள் கையகப்படுத்தப்பட்டுள்ளன” எனக் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஐக்கிய நாடுகள் சபையும் இஸ்ரேலின் நடவடிக்கைகளை கண்டித்துள்ளது.
இன்று காலை முதல் கிரேட்டா தன்பெர்க் குழுவினரின் படகுகள் பற்றிய தகவல்கள் நிறுத்தப்பட்டுள்ளன. யாரும் படகில் இருந்தவர்களைத் தொடர்புகொள்ள முடியவில்லை. படகு இருக்கும் இடம் பற்றிய சிக்னல்களும் நின்றுவிட்டன.
All the passengers of the ‘selfie yacht’ are safe and unharmed. They were provided with sandwiches and water. The show is over. pic.twitter.com/tLZZYcspJO
— Israel Foreign Ministry (@IsraelMFA) June 9, 2025
2010ல் நடந்த கொடூரமும், மறைந்திருக்கும் அச்சமும்!
முன்னதாக 2010ம் ஆண்டு இதேபோல ஒரு சம்பவம் நடைபெற்றிருக்கிறது. காசாவுக்கு உதவிகள் செல்ல இஸ்ரேல் ஏற்படுத்திய தடுப்புகளைத் தாண்டி நிவாரணங்களை வழங்க முற்பட்டது மர்மரா என்ற கப்பலில் சென்ற செயற்பாட்டாளர்கள் குழு. சர்வதேச கடல் பரப்பில் இந்த கப்பலை வழிமறைத்து உள்ளே சென்ற இஸ்ரேல் கமாண்டோக்கள் 9 செயற்பாட்டாளர்களைக் கொலை செய்தனர்.
இந்த சம்பவத்துக்குப் பிறகு கடுமையான கண்டனங்களை எதிர்கொண்டது இஸ்ரேல்.
இந்த முறை, செயற்பாட்டாளர்கள் பாதுகாப்பாக இருப்பதாக அறிவித்துள்ளதுடன், அவர்களை இஸ்ரேல் கரையில் இருந்து திருப்பிவிட்டதாகவும், அவர்கள் ‘வீட்டுக்கு’ திரும்பிச் செல்வார்கள் என நம்புவதாகவும் கூறியுள்ளது இஸ்ரேல் வெளியுறவுத்துறை.
இஸ்ரேல் முந்தைய சம்பவத்திலிருந்து பாடம் கற்றுக்கொண்டுள்ளதாகக் கூறுகின்றனர் அரசியல் நிபுணர்கள். இஸ்ரேல் அரசு திருப்பி அனுப்பியதாகக் கூறிய பிறகும் மேட்லீன் படகு இப்போது எங்கிருக்கிறது என்பது இதுவரைத் தெரியவில்லை. தொடர்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளன.
பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் படகில் இருக்கும் தங்கள் குடிமக்களை விரைவில் மீட்க முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன.