
லாட்டரி சட்டப்பூர்வமாக உள்ள இடங்களில் வழ்க்கையில் ஒருமுறையாவது அதிர்ஷ்டம் அடித்துவிடாதா என லட்சக்கணக்கானோர் காத்திருக்கின்றனர்.
மிகப் பெரிய தொகையைப் பரிசாகத் தரும் லாட்டரிகளில் ஒருமுறை வெற்றி பெற்றாலே லைஃப் டைம் செட்டில்மென்ட் கிடைக்கும்.
கனடாவில் புற்றுநோயில் இருந்து மீண்ட நபருக்கு ஒன்றல்ல மூன்றுமுறை லாட்டரி அடித்திருக்கிறது. அதுவும் வெறும் ஒன்பதே மாதத்துக்குள்.
‘சுக்ரன் உச்சத்தில் லக்கு தான் மச்சத்தில்’ என சந்தோஷமாக இருக்கிறார் டேவிட் செரிகின். “நான் அதிர்ஷ்டத்தை துரத்துவதில்லை, எனக்கு டிக்கெட் வாங்கப் பிடிக்கும், ஒரு மகிழ்ச்சிக்காகத்தான் விளையாடுகிறேன்” என கேஷுவலாக பேட்டியளித்திருக்கிறார்.
மேலும் என்னதான் அதிர்ஷ்டம் அடிப்பது நம்ம கையில் இல்லைன்னாலும் அடுத்ததும் டிக்கெட் வாங்கப்போவதாகக் கூறியிருக்கிறார்.
கனடாவில் LOTTO 6/49 என்ற லாட்டரி அறிமுகப்படுத்தப்பட்ட 1982ம் ஆண்டு முதலே டிக்கெட் வாங்கிவருகிறாராம் டேவிட். இவருக்கு முதல்முறையாக 2024 ஆகஸ்டில் LOTTO மேக்ஸ் டிக்கெட்டில் 5 லட்சம் டாலர்கள் கிடைத்திருக்கிறது.
இந்த லாட்டரி நிறுவனத்தில் 33,294,800 பேரில் ஒருவருக்குத்தான் அதிர்ஷ்டம் அடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னர் கடந்த நவம்பர் மாதம், LOTTO 6/49 கோல்ட் பால் ட்ராவில் 1 மில்லியன் டாலர்கள் கிடைத்திருக்கிறது. இறுதியாக 2025 மே மாதம் 3ம் தேதி மற்றொரு 1 மில்லியன் டாலர்கள் கிடைத்திருக்கிறது.
இந்த மச்சக்கார மனிதர் குறித்து ஜூன் 2ம் தேதி மேற்கு கனடா லாட்டரி கார்ப்பரேஷன் செய்தி வெளியிட்டுள்ளது.
இதுவரை இவருக்கு லாட்டரி வெற்றிகள் மூலம் கிடைத்துள்ள தொகை, இந்திய மதிப்பில் சுமார் 21 கோடி ரூபாய். பெரும்பாலான இந்தியர்கள் வாழ்நாள் முழுவதும் உழைத்துப் பெறும் தொகையை விட அதிகம்.
இந்த பெரும் தொகையைப் பெற்றுவிட்டு, “நான் புற்றுநோயிலிருந்து பிழைத்தவன், வேலையிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டேன். எனக்கு கிடைக்கும் அதிர்ஷ்டத்துக்கு நன்றி உள்ளவனாக இருக்கிறேன்” என அடக்கமாக பேசியிருக்கிறார்.
லாட்டரி பணத்தை எப்படி செலவு செய்யப்போகிறார் எனக் கேட்கப்பட்டபோது, “கடந்த முறை வென்றபோது என் மனைவியை கூட்டிக்கொண்டு ஹவாய் சென்றேன். எங்களுக்கு இனிமையான நாட்களாக அவை அமைந்தன. இப்போது நியூஃபவுன்லாந்து செல்லலாம் என இருக்கிறேன்” என வெட்கப்பட்டு சிரித்தபடி பதிலளித்திருக்கிறார்.