
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் சமீபத்தில் தொழில்நுட்ப மாநாடு நடைபெற்றது. அதில், கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, கூகுள் தொழில்நுட்ப நிறுவனத்தின் அடுத்த தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து உரையாற்றினார். அவரின் உரையில், “கூகுளின் அடுத்துவரும் தலைமை நிர்வாக அதிகாரி, கூகுளின் செல்வாக்கால் வரும் சக்தி மற்றும் பொறுப்பை உண்மையிலேயே புரிந்துகொள்பவராக இருக்க வேண்டும்.
எதிர்காலத் தலைவர் கூகுளின் கருவிகள், அதன் புதிய அப்டேட்கள் மக்களின் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும். கூகுள் எவ்வாறு செயல்படுகிறது என்பதை வடிவமைப்பதில் ஏ.ஐ-யின் பங்கு அளப்பரியது. கூகுளின் அடுத்த தலைமை அதிகாரியாக யார் பொறுப்பேற்கிறார்களோ… அவர்களுக்கு ஆதரவளிக்க ஒரு அசாதாரண AI துணை இருக்கும். AI மனித வேலைகளை எடுத்துக் கொள்ளும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. வேலையின் ஒவ்வொரு பகுதிகளையும் AI கவனித்துக்கொள்வதன் மூலம் உற்பத்தித் திறனை அதிகரிக்க உதவும் என்று நம்புகிறேன்.
கூகிள், 2026 வரை இன்னும் அதிகமான இன்ஜினீயர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளது. இந்தியாவின் சென்னையில் லாரிகள் மூலம் வழங்கப்படும் தண்ணீருக்காக என் குடும்பத்தினர் வரிசையில் நிற்பார்கள், ஒரு வீட்டிற்கு எட்டு வாளிகள் மட்டுமே அப்போது கொடுக்கப்பட்டது. இதுபோன்ற அனுபவங்கள்தான் தொழில்நுட்பம் வாழ்க்கையை மேம்படுத்த உருவாக்கப்பட வேண்டும் என்ற என் நம்பிக்கையை விதைத்தது.” என்றார்.

இந்த உரையின்போது சுந்தர் பிச்சை எந்த பெயரையும் குறிப்பிடவில்லை. பதவி விலகப் போவதாகவோ கூறவில்லை. ஆனால், அடுத்த தலைமை அதிகாரி எனத் தொடர்ந்து குறிப்பிட்டு பேசிவந்தார். அதனால், அவர் பதவி விலகப்போகிறாரா? எனக் கேள்வி எழுந்திருக்கிறது.