
மதுரை ஆரப்பாளையத்தில் பேருந்தை முன்கூட்டியே இயக்குவது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஓட்டுநரை பேருந்து நிலைய உதவி மேலாளர் காலணியால் அடித்த காணொலி சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சைக் கிளப்பியிருக்கிறது.
இதுகுறித்துப் பலரும் போக்குவரத்துக் கழக மேலாளர் மாரிமுத்துவின் செயலைக் கண்டித்து, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறிவருகின்றனர். இதையடுத்து, அரசு பஸ் ஓட்டுநர் கணேசன் மற்றும் அரசிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று பேருந்து நிலைய உதவி மேலாளர் மாரிமுத்து மன்னிப்புக் கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் சம்பவம் குறித்து அரசைக் கண்டித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், “கட்டப்பஞ்சாயத்து செய்யவா அரசு? ஓட்டுனரை காலணியால் அடித்த போக்குவரத்துக் கழக மேலாளரை உடனே கைது செய்ய வேண்டும்! மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில், எந்தத் தவறும் செய்யாத அரசுப் போக்குவரத்துக்கழக ஓட்டுனரை அரசுப் போக்குவரத்துக்கழக உதவி மேலாளர் காலணியால் அடித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
மன்னிப்புக் கேட்கச் சொல்லி விட்டு ஒதுங்கிவிட்டது அரசும், காவல் துறையும்
அதற்குக் காரணமாக உதவி மேலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசும், காவல்துறையும் அவரை காணொலியில் மன்னிப்புக் கேட்கச் சொல்லி விட்டு ஒதுங்கியிருப்பது அதைக் விடக் கொடுமையானது. போக்குவரத்துக்கழகம் மற்றும் காவல்துறையின் இந்த அணுகுமுறை கண்டிக்கத்தக்கது.
இது மன்னிக்க முடியாத குற்றம்
பாதிக்கப்பட்ட அரசு பேருந்தின் ஓட்டுனர் எந்தத் தவறும் செய்யவில்லை. மாறாக, பேருந்தை இயக்கும்படி பயணிகள் கோரிய போது உயரதிகாரியான மேலாளர் ஆணையிட்டால் தான் இயக்க முடியும் என்று கூறியுள்ளார். இதில் எந்தத் தவறும் இல்லை. இது தொடர்பாக உதவி மேலாளரிடம் பயணிகள் முறையிட்ட போது, பயணிகளை தரக்குறைவாக பேசிய உதவி மேலாளர், சம்பந்தப்பட்ட ஓட்டுனரை தாம் அணிந்திருந்த காலணியால் அடித்திருக்கிறார். இது மன்னிக்க முடியாத குற்றம். ஓட்டுனரை உதவி மேலாளர் காலணியால் தாக்கும் காணொலி வைரலாகி வரும் நிலையில், அதனடிப்படையில் விசாரணை நடத்தி உதவி மேலாளர் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
ஓட்டுனர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அதற்கு பதிலாக நடந்த நிகழ்வுக்கு மன்னிப்புக் கேட்பதாக உதவி மேலாளரை காணொலி வெளியிடச் செய்திருக்கிறது அரசு. இது அப்பட்டமான கட்டப்பஞ்சாயத்து என்பதைத் தவிர வேறில்லை.

நடவடிக்கை எடுக்கத் தவறிய அனைத்து அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்
பொதுமக்கள் மத்தியில் ஒருவரை எவரேனும் காலணியால் தாக்கும்பட்சத்தின் அவர் காணொலியில் மன்னிப்பு கேட்டால் போதுமானது என்றால், பலரும் முன்கூட்டியே மன்னிப்பு காணொலிகளை பதிவு செய்து வைத்து விட்டு, யாரை வேண்டுமானாலும் காலணியால் தாக்குவார்கள். இப்படி ஒரு சூழலைத் தான் தமிழக அரசு, போக்குவரத்துக் கழகம், காவல்துறை ஆகியவை விரும்புகின்றனவா? என்பதை அரசு விளக்க வேண்டும். அரசின் கடமை நிர்வாகம் செய்வது தான், கட்டப்பஞ்சாயத்து செய்வதில்லை என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும். ஓட்டுனர் தாக்கப்பட்டதற்கு காரணமான உதவி மேலாளர் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும். இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கத் தவறிய அனைத்து அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.” என்று கூறியிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs