
சென்னை: “நாகப்பட்டினம் மாவட்டம் உத்தமசோழபுரம் கிராமத்தில், புதிய இடத்தில் ரெகுலேட்டர் கட்டுவதைக் கைவிட வேண்டும். விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் அனைத்து அரசியல் கட்சியினரின் கோரிக்கையை ஏற்று, அதிமுக ஆட்சியில் கட்ட திட்டமிடப்பட்ட இடத்தில் ரெகுலேட்டர் அமைக்க வேண்டும், இல்லாவிடில், அதிமுக சார்பில் மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்படும்,” என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த நான்காண்டு கால மக்கள் விரோத திமுக ஆட்சியால் பாதிக்கப்பட்டவர்கள், தமிழகம் முழுவதும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றார்கள். மக்களின் எண்ணங்களுக்கு வடிகாலாக அதிமுக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது. திமுக ஸ்டாலின் மாடல் அரசு, நாகப்பட்டினம் மாவட்டம், திருமருகல் ஊராட்சி ஒன்றியம், உத்தமசோழபுரம் கிராமத்தில் வெட்டாற்றின் குறுக்கே கடல் மட்டத்தில் இருந்து மேற்கே 7.88 கி.மீ. தொலைவில் புதிய கடைமடை இயக்க அணை (ரெகுலேட்டர்) ஒன்றை சுமார் 49.50 கோடி ரூபாய் மதிப்பில் கட்டுவதற்கு 2.2.2025 அன்று அடிக்கல் நாட்டியது.