
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அரசுப் போக்குவரத்து கிளையிலிருந்து திருப்பூர்-மதுரை சிறப்புப் பேருந்து ஞாயிற்றுக்கிழமை இயக்கப்பட்டது.
இந்தப் பேருந்தை ஓட்டுநர் கணேசன் இயக்கினார். மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் பயணிகளை இறக்கிவிட்ட நிலையில், அந்தப் பேருந்து நிலையத்தின் உதவி மேலாளர் மாரிமுத்துவுக்கும், ஓட்டுநர் கணேசனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அதில், ஆத்திரம் அடைந்த மாரிமுத்து ஓட்டுநர் கணேசனை ஷூ-வால் தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதைத் தொடர்ந்து, உதவி மேலாளர் மாரிமுத்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், உதவி மேலாளர் தாக்கியதால் காயமடைந்த ஓட்டுநர் கணேசன் தாராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கணேசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, திருப்பூரில் இருந்து மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்துக்குப் பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்றேன்.
பேருந்து நிலையத்தில் அதிக கூட்டம் இருந்ததால், என்னால் ஆரப்பாளையம் பேருந்து நிலையத்துக்குள் செல்ல முடியவில்லை.
அதனால், ஆரப்பாளையம் பேருந்து நிலையத்துக்கு வெளியே பேருந்தை நிறுத்தினேன். எனது பேருந்தைப் பார்த்த பயணிகள் அதில் ஏறி அமர்ந்து கொண்டனர்.
என் பேருந்துக்குப் பின்னால் அதிகமான தனியார்ப் பேருந்துகள் நின்றன. அப்போது, அங்கு வந்த உதவி மேலாளர் மாரிமுத்து தனியார்ப் பேருந்துகளுக்கு ஆதரவாகப் பயணிகளை இறக்கிவிடுமாறு தகாத வார்த்தைகளால் என்னைப் பேசினார்.
அத்துடன், நடத்துநரிடம் இருந்து இன்வாய்ஸை வாங்கிச் சென்றுவிட்டார்.

அந்த இன்வாய்ஸை வாங்க நானும், நடத்துநரும் சென்றோம். அவரது அலுவலகத்தில் வைத்து மீண்டும் என்னைத் தகாத வார்த்தைகளால் உதவி மேலாளர் மாரிமுத்து திட்டினார். அதற்கு நான் மரியாதையாகப் பேசுங்கள் என்றேன்.
அப்போது, உனக்கெல்லாம் நான் மரியாதை தர வேண்டுமா? எனக் கூறி, அவர் அணிந்திருந்த ஷூ-வைக் கழற்றி என்னைத் தாக்கத் தொடங்கினார். வயதான தொழிலாளி என்றும் பாராமல் ஷூவை கொண்டு என்னை அடித்த அவர் மீது துறைரீதியில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
இந்நிலையில், ஓட்டுநர் கணேசனைத் தாக்கிய உதவி மேலாளரைப் பணிநீக்கம் செய்ய வேண்டும் என்றும் அவர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி, தாராபுரத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.