• June 9, 2025
  • NewsEditor
  • 0

சுதந்திரம் இந்திய நாட்டிற்கு வேண்டுமானால் கிடைத்திருக்கலாம். ஆனால் இன்றுவரை பல கிராமங்களில் சாலை வசதியும் சுடுகாட்டிற்கு பாதையும் இல்லாமலும் மக்கள் அவதிப்பட்டுதான் வருகின்றனர்.குறிப்பாக தலித் பழங்குடியின மக்கள் இன்றும் தங்களின் உரிமைக்காகவும் அடையாளத்திற்காகவும் போராடிக் கொண்டுதான் இருக்கின்றனர். இதற்கு மேலும் ஒரு எடுத்துக்காட்டாக விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த ஏப்பாக்கம் கிராமத்தில் மேட்டுக்காலனி தெருவில் சாலை வசதி இன்றி மூன்று தலைமுறை காலமாக மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.

அது குறித்து ‘நாலு தலைமுறையா நாதியத்து கெடக்கோம்யா! பாதைக்காக போராடும் பட்டியல் சமூகம் மக்கள்’ என்ற தலைப்பில் ஜூனியர் விகடன் இதழில் கட்டுரை ஒன்றும் எழுதி உள்ளோம். அதில், ஏப்பாக்கம் கிராம மக்களின் வாழ்க்கையை விவரித்து, அடிப்படைவசதிகள் கிடைக்கப் பெறாமல் அவர்கள் அனுபவிக்கும் வலிகள் குறித்தும் எடுத்துரைத்தோம். இது குறித்து விளக்கம் அளித்த விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான், “அவர்கள் குடியிருக்க வேறு இடத்தில் மாற்று நிலம் வழங்க முடியுமா என்று பார்க்கிறேன். அவர்கள் அனைவரும் பட்டா இருப்பதால் வேறு இடத்தில் நிலம் வாங்குவதிலும் சிக்கல் இருக்கிறது. எனவே அவர்கள் வசிக்கும் இடத்திலேயே சாலை அமைப்பது தான் சரியாக இருக்கும்.

அதன் அடிப்படையில் சாலை வசதிக்காக பக்கத்து நிலங்களை கையகப்படுத்துவது தொடர்பாக நில உரிமையாளர்களிடம் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். சில உரிமையாளர்கள் நிலம் கொடுக்க ஒப்புக்கொண்டுள்ளனர். சிலர் மறுக்கின்றனர் . தொடர் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். விரைவில் அவர்களுக்கான பாதை வசதி செய்து தரப்படும்” என்று கூறினார்.

இதற்குப் பின்னர் தங்களது அன்றாட வாழ்க்கையை வாழ முடியாமல் அவதிப்படுகின்ற மேட்டு காலனி பகுதி மக்கள், தாங்கள் உயிருடன் வாழ்வதற்காகவாவது சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என மே மாதம் 5-ம் தேதி ஏப்பாக்கம் கிராம மக்களும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கமும் இணைந்து திண்டிவனம் வட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் .வருவாய் அதிகாரிகள் ஒரு மாத காலத்திற்குள் சாலை வசதி ஏற்படுத்தி தருவதாக அளித்த உத்தரவாதத்தினை ஏற்று போராட்டத்தை கைவிட்டனர். ஆனால் எப்பொழுதும் போல் அரசு அதிகாரிகள் கொடுத்த வாக்கு காற்றில் காணாமல் போய்விட்டது.

இரண்டு நாட்களுக்கு முன்னர் ஏப்பாக்கம் கிராமத்தில் 60 வயதான வடிவேல் என்பவர் சாலை வசதிக்காக தொடர்ந்து போராடி 5:6:2025 காலை 6:00 மணி அளவில் இயற்கை எய்தினார் . இவரது சடலத்தை சவுக்கு தோப்பு நடுவே உள்ள ஒத்தையடி பாதையில் தட்டு தடுமாறி ஒரு கிலோ மீட்டர் தூரம், தோளிலே சுமந்து சென்று இறுதி அஞ்சலி செய்தனர் ஊர்மக்கள். இவை நமக்கு கேட்பதற்கு சற்று அதிர்ச்சியாக இருந்தாலும் ,மேட்டுதெருவில் யார் இறந்தாலுமே இவ்வாறே சாலை வசதி இல்லாமல் தோளிலே சுமந்து சென்று இறுதி அஞ்சலி செய்வார்கள் என்பது மிகவும் வேதனை அளிக்கிறது. அவர்களது வீடுகளும் சருவளான பாதையில் ,குறுகலான வழி, பின்பு வேலியால் நிறைந்த முள் வெளிப்பாதையில் அமைந்துள்ளது. ஏழைகளுக்கு வாழ்வதுதான் கொடுமை என்றால் இங்கு சாவதும் கொடுமையாக உள்ளது. இறந்தவருக்கு இறுதி சடங்கு செய்வதற்கும் இத்தனை இன்னல்களை தாண்டித்தான் செய்ய வேண்டியதாக உள்ளது என பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இந்தப் பகுதி மக்களுக்கான தீர்வு எப்பொழுது தான் கிடைக்கும் என அரசு தான் கூற வேண்டும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *