
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள வையாபுரி கிராமத்தில் எஸ்.எஸ்.எல்.எஃப் ரியல் எஸ்டேட் உரிமையாளர் தொழிலதிபர் சக்திவேல் மகளுக்கு பூப்புனித நீராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் நாம் தமிழர் கட்சி சீமான் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த சீமான்,
“வரும் 2026, 2029, 2032 ஆகிய ஆண்டுகளில் நடைபெற இருக்கும் அனைத்து தேர்தல்களிலும் நாம் தமிழர் கட்சி தனித்து தான் போட்டியிடும். பா.ஜ.க-வினர் முருகனை ஒப்புக்குத் தூக்கிப் பிடிக்கிறார்கள். நான் உளமாற தூக்கிப் பிடிக்கிறேன். நான் முருகனின் பேரன். நான் எடுப்பதற்கும், அவர்கள் எடுப்பதற்கும் வித்தியாசம் உள்ளது. பா.ஜ.க நேற்று ஆரம்பிக்கப்பட்ட கட்சி கிடையாது. முருகன் நேற்று வரவில்லை. இவ்வளவு நாள் எடுக்காமல் என்ன பண்ணிக் கொண்டிருந்தீர்கள்?. இங்கே முருகனுக்கு ஒரு மதிப்பு இருக்கிறது. முருகனைத் தொட்டால் ஓட்டு வருமா என்று பார்க்கிறீர்கள்.
அந்த ஓட்டை நீங்கள் என்ன தொட்டாலும் `வேல் வேல் வெற்றிவேல்’ என்றால் முருகன், அதன் பிறகு அவன் பேரன் எனக்குத்தான். இந்த மாநாட்டை அரசியலுக்கு பா.ஜ.க நடத்துகிறார்களா என்று கேட்கிறீர்கள். பிறகு, வேறு எதற்காக நடத்துகிறார்கள்?. அப்படி என்றால் அவர்கள் அப்பவே நடத்தியிருக்க வேண்டும். உத்தரபிரதேசத்தில் ராமரைத் தொடுவார்கள். கேரளாவில் ஐயப்பனைத் தொடுவார்கள். தமிழகத்தில் எங்களுடைய இறையப்பன் முருகனைத் தொட்டு இருக்கிறீர்கள். ஒரிசாவில் பூரி ஜெகநாதரைத் தொடுவார்கள். இதற்கெல்லாம் ஏமாறுகின்ற கூட்டம் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?. பி.ஜே.பி-யின் அரசியல் மத அரசியல் இல்லாமல், மக்கள் நல அரசியலா செய்கிறார்கள்?. பா.ஜ.க-வின் இந்த அரசியலை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்வார்களா என்று கேட்கிறீர்கள். அதற்கு வாய்ப்பில்லை ராஜா” என்றார்.