
வைகை அணை பராமரிப்பில் தொடர்ந்து மெத்தன நிலை நிலவி வருவதால் அணையின் கட்டுமான பகுதிகள், மின் இணைப்புகள் ஏராளமான இடங்களில் சேதமடைந்து காணப்படுகின்றன. நீர்வளத் துறை அதிகாரிகள் தேவையான பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களின் முக்கிய குடிநீர் மற்றும் பிரதான பாசனநீர் ஆதாரமாக வைகை அணை உள்ளது. 71 அடி உயரம் கொண்ட இந்த அணையில் சுமார் 15 கி.மீ. சுற்றளவுப் பகுதியில் தண்ணீர் தேக்கப்பட்டு வருகிறது. அணை முழுக் கொள்ளளவை எட்டும்போது குன்னூர், அரப்படித்தேவன்பட்டி, கருப்பத்தேவன்பட்டி, வைகைப்புதூர், கரட்டுப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் வரை அணை நீர் தேங்கி நிற்கும்.