
இந்திய சினிமாவின் உச்சத்தில் இருக்கும் கலைஞர்களான அமீர் கான் மற்றும் மணிரத்னம் இடையே நல்ல நட்புறவு இருந்தாலும், இருவரும் இதுவரைத் திரைப்படத்தில் இணைந்து பணியாற்றியது இல்லை.
ஷாரூக் கான், அபிஷேக் பச்சன், விவேக் ஓபராய், அஜய் தேவகன் போன்ற இந்தி நடிகர்களை இயக்கியுள்ளார் மணிரத்னம். இந்த வரிசையில் அமீர்கான் இணைவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய அமீர்கான், ஒரு ப்ராஜக்டில் ஒன்றாக பணியாற்ற ஒரு கதையைத் தேர்ந்தெடுத்ததாகவும், கடைசி நேரத்தில் அது கைவிடப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
அமீர்கான் கூறியதன்படி இரண்டு லெஜண்ட்களும் இணைவதற்கு தேர்தெடுத்த கதை மற்றொரு லெஜண்டான இந்திய உருது எழுத்தாளர் இஸ்மத் சுக்தாயின் கர்வாலி என்ற சிறுகதைதானாம்.
இந்த கதையில் வரும் லஜ்ஜோ என்ற பாத்திரத்தை மையமாக வைத்து திரைக்கதை உருவாக்கத் திட்டமிட்டனராம்.

“நான் மணி ரத்னத்தின் மிகப் பெரிய ரசிகன். எப்போதுமே அவருடன் இணைந்து பணியாற்ற வேண்டுமென்று விரும்பினேன்.
அவரைப் பலமுறை சந்தித்திருக்கிறேன். அவர் வீட்டில் நாங்கள் சிறப்பான விஷயங்களை உரையாடியிருக்கிறோம்.
நாங்கள் இருவரும் ஒருவர் மற்றவருடன் பணியாற்ற விரும்பினோம். லஜ்ஜோவில் கிட்டத்தட்ட இருவரும் இணைந்து பணியாற்ற தயாரானோம். ஆனால் சில காரணங்களால் அது நடக்கவில்லை, அது என் சம்பந்தப்பட்டதோ, அவர் சம்மந்தப்பட்டதோ அல்ல” எனக் கூறியுள்ளார் அமீர்கான்.
மேலும், “நாங்கள் இருவரும் நிச்சயமாக ஒருநாள் இணைந்து பணியாற்றுவோம் என இன்னமும் நம்பிக்கைக் கொண்டிருக்கிருக்கிறேன்” என்று கூறியுள்ளார் அமீர்கான்.