
ராகுல் காந்தியின் சமீபத்திய பீகார் பயணம் சுவாரஸ்யமான உரையாடல்களுக்கு வழிவகுத்துள்ளது.
கயாவில் மகிளா சம்வாத் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர், சமூக வலைத்தளங்களில் ‘Pad Girl’ என அறியப்படும் ரியா பஸ்வான் என்ற பெண்ணிடம் பேசினார்.
அந்தப் பெண் ராகுல் காந்தியிடம், அவரை முன்மாதிரியாகக் கொண்டே அரசியலில் நுழைந்ததாகவும், அவரைப் போலவே திருமணம் செய்துகொள்ளாமல் இருக்க விரும்புவதாகவும் கூறியுள்ளார்.
ட்விட்டரில் வைரலாகிவரும் வீடியோவின்படி, ரியா அரசியலில் பெண்களை ஈடுபடுத்துவதற்கான காங்கிரஸின் முன்னெடுப்பான சக்தி அபியான் மூலமே தனது வாழ்க்கை மாறியதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், “கல்வி போன்ற பல்வேறு துறைகளை மேம்படுத்துவதற்கான முதல் அடியாக அரசியல்தான் இருக்கிறது. ஆனால் பலரும் (குறிப்பாகப் பெண்கள்) இந்த துறைக்கு வருவதில்லை” எனக் கூறியுள்ளார்.
“நாங்கள் எங்களில் பகுதியில் மிகப் பெரிய அணியாக இருக்கிறோம். சக்தி அபியானால் இது சாத்தியமானது. மக்களின் சின்ன சின்ன பிரச்னைகளைச் சரிசெய்யத் தொடங்கினோம்.
இப்போது அவர்களுக்கு என்ன பிரச்னை என்றாலும் எங்களிடம்தான் வருகிறார்கள்” என ராகுல் காந்தியிடம் தெரிவித்துள்ளார் ரியா பஸ்வான்.
आज गया में Shakti Samvad कार्यक्रम के मंच से मैंने अपनी आवाज़ उठाई – महिलाओं के मुद्दे, मोहल्ले की समस्याएं, और जनता की सच्चाई को Rahul Gandhi ji के सामने रखा।
मैं Riya Paswan हूं, और मैं हर ग़लत के खिलाफ खड़ी हूं। pic.twitter.com/7ymZftN8W0— Riya Kumari (@kumarir6529) June 7, 2025
ரியாவின் உறுதியால் கவரப்பட்ட ராகுல் காந்தி, “நீங்கள் நன்றாகப் பேசுகிறீர்கள்” எனப் பாராட்டினார்.
தொடர்ந்து பேசிய ரியா, “நான் உங்களைப் போலவே திருமணம் செய்யாமல் இருக்க திட்டமிட்டுள்ளேன்” எனக் கூறி அரங்கில் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளார்.
“நான் மக்களுக்குப் பணியாற்றும் தலைவராக விரும்புகிறேன். சக்தி அபியான் மூலம் அரசியல் என்பது என்னவென்று புரிந்துகொண்டதால், அரசியலில் ஈடுபட விரும்புகிறேன்” என்றும் பேசியுள்ளார்.
ரியா பஸ்வான் கடந்த 2022ம் ஆண்டு, இலவசமாக சானிட்டரி நாப்கின் வழங்கும் பிரச்னையில் ஐஏஎஸ் அதிகாரியை எதிர்த்து துணிச்சலாகக் கேள்வி எழுப்பியதன் மூலம் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.