• June 7, 2025
  • NewsEditor
  • 0

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போதிய பேருந்து வசதிகள் இல்லாமல் பயணிகள் அவதியுறுவதாக திமுக அரசைக் கண்டித்து தவெக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

CTR Nirmal Kumar – TVK

தவெகவின் துணைப் பொதுச்செயலாளரான சி.டி.ஆர்.நிர்மல்குமார் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “சென்னை மாநகரில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் செல்லும் பொதுமக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் சென்னைக்குள் போக்குவரத்து நெரிசல் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது.

சென்னை மற்றும் புறநகரில் அதிகரித்து வரும் மக்கள் தொகையின் எண்ணிக்கை மற்றும் அடர்த்திக்கு ஏற்றவாறு அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் கிடைக்கின்றனவா என்றால் இல்லை என்பதே பதில்.

இதற்கு மிகப் பெரிய உதாரணம், இந்த வாரம், ஜூன் 4ஆம் தேதி இரவு முதல் கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் வெளியூருக்குச் செல்லும் பயணிகள் பேருந்துகள் இல்லாமல் கடும் அவதிக்கு உள்ளான கொடும் சம்பவம்.

கிளாம்பாக்கம் பேருந்து முனையம்
கிளாம்பாக்கம் பேருந்து முனையம்

சென்னைக்கு வெளியே வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் எந்த ஓர் அடிப்படையான போக்குவரத்து வசதிகளையும் ஏற்படுத்தாமல் புதிய பேருந்து நிலையம் அவசர கதியில் திறக்கப்பட்டது.

சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து கிளாம்பாக்கம் செல்ல, ரயில் மற்றும் பேருந்துப் போக்குவரத்தைப் போதிய அளவில் உருவாக்காமலேயே புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டதால், திறந்தது முதலே பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

கோயம்பேடு பேருந்து நிலையம் தொடங்கப்பட்ட போதும் போதிய வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தொடங்கப்பட்ட போதும் போதிய வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை.

மக்களின் தேவைகள் என்ன என்பதை அறிந்து அதற்கேற்ப திட்டமிட்டுச் செயல்படுத்துவதே சிறந்த ஆட்சி. ஆனால் தமிழ்நாட்டை இதுவரை ஆட்சி செய்தவர்கள் மக்களின் தேவைகளை அறிந்து ஆட்சி செய்யவில்லை என்பதற்கு இந்த இரு பேருந்து நிலையச் செயல்பாடுகளே கண்ணெதிரே காணும் சாட்சிகள்.

TVK Vijay
TVK Vijay

இது ஒருபுறம் இருக்க, கடந்த புதன்கிழமை இரவு கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் போதிய பேருந்துகள் இல்லாததால், தென் மாவட்டங்களுக்குச் செல்ல வேண்டிய பயணிகள் தங்களது குடும்பத்தினருடன் கைக்குழந்தைகளோடு கடும் அவதிக்கு உள்ளாகியது மிகுந்த மன வேதனையைத் தருகிறது.

பல மணி நேரம் காத்திருந்து, இங்கும் அங்குமாய் அலைந்து திரிந்த பயணிகள் பேருந்துச் சேவையே இல்லை என்பது தெரிந்ததும், கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகினர்.

அந்த நள்ளிரவில் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தங்களது குடும்பத்தினருடன் அரசுக்கு எதிராக முழக்கமிட்டு, சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியுமே பொதுமக்கள் சமாதானம் ஆகவில்லை. இதன் மூலம் அவர்களின் கோபம் எந்த அளவு இருந்திருக்கும் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

TVK Vijay
TVK Vijay

கோவில் திருவிழா காரணமாகப் பேருந்துகள் அனுமதிக்கப்படவில்லை. அதனால்தான் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பேருந்துகள் இயக்கப்படவில்லை என்று அரசு கூறும் காரணம், பொதுமக்கள் மீது பழியைச் சுமத்தி, தங்களின் நிர்வாகத் தோல்வியை மறைக்கப் பார்ப்பதேயன்றி வேறில்லை.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் என்றாலே மக்களின் கிளர்ச்சிப்பாக்கம் என்று விமர்சிக்கும் வகையில், பயணிகள் பேருந்துகள் வசதியின்றி கடும் அவதிக்கு உள்ளாவதே இன்னும் தொடர்கதையாகி வருகிறது.

தவெக அறிக்கை
தவெக அறிக்கை

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட்டு ஒன்றரை ஆண்டுகள் ஆகியும் முறையான பேருந்து சேவைகள் செய்யப்படாதது கடும் கண்டனத்துக்கு உரியது.

திருவிழாக் காலங்கள் மற்றும் விடுமுறை நாள்களில் கிளாம்பாக்கத்தில் இருந்து தென் மாவட்டங்கள் மற்றும் இதர மாவட்டங்களுக்கு அதிக பேருந்துகளை இயக்க வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்கள் ஒப்புதலுடன் தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்” எனக் கூறியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *