
பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாரதி (27). இவர் அரசு வேலை தேடிக் கொண்டிருந்தார். இந்தச் சமயத்தில் சென்னை தி.நகரைச் சேர்ந்த மோகன்ராஜன், அவரின் கூட்டாளியான விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் ஆகியோரின் அறிமுகம் பாரதிக்குக் கிடைத்திருக்கிறது.
அப்போது மோகன்ராஜனும் ராதாகிருஷ்ணனும் தாங்கள் இருவரும் தலைமைச் செயலகத்தில் உயரதிகாரிகளாக வேலை செய்து கொண்டிருப்பதாக பாரதியிடம் கூறியிருக்கிறார்கள்.
அதை உண்மை என நம்பிய பாரதியும் தன்னுடைய கனவான அரசு வேலை குறித்து இருவரிடமும் கேட்டிருக்கிறார். அதற்கு மோகன்ராஜனும் ராதாகிருஷ்ணனும் ‘உதவி மக்கள் தொடர்பு அலுவலர்’ வேலையை வாங்கித் தருவதாக உறுதியளித்திருக்கிறார்கள்.
பின்னர் அதற்குச் சில லட்சம் ரூபாய் செலவாகும். அந்தப் பணத்தைக் கொடுத்தால் உதவி மக்கள் தொடர்பு அலுவலர் போஸ்டிங் வாங்கித் தருவதாக பாரதியிடம் மோகன்ராஜனும் ராதாகிருஷ்ணனும் ஆசைவார்த்தைகளைக் கூறியிருக்கிறார்கள்.
இதையடுத்து பாரதியிடம் பணத்தைப் பெற்றுக் கொண்ட மோகன்ராஜனும் ராதாகிருஷ்ணனும் உதவி மக்கள் தொடர்பு அலுவலர் வேலைக்கான நியமன ஆர்டரை பாரதியிடம் கொடுத்திருக்கிறார்கள்.
அதை வாங்கிய பாரதி, தலைமைச் செயலகத்தில் அந்த ஆர்டரை கொடுத்து வேலைக்குச் சேர சென்றபோதுதான், அது போலி எனத் தெரியவந்தது. அதனால் மோகன்ராஜன், ராதாகிருஷ்ணன் ஆகியோர் தங்களை ஏமாற்றியதை பாரதி உணர்ந்தார்.
பின்னர் இதுதொடர்பாக சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவின்பேரில் கூடுதல் கமிஷனர் ராதிகா மேற்பார்வையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு வேலைவாய்ப்பு மோசடி தடுப்புப் பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
விசாரணையில் பாரதியைப் போல மேலும் 11 பேரிடம் அரசு வேலை, நீதித்துறையில் ஓஏ வேலை எனக் கூறி மொத்தம் 12 பேர்களிடம் 1,66,36,000 ரூபாயை மோகன்ராஜனும் ராதாகிருஷ்ணனும் வாங்கி ஏமாற்றியிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து இருவரையும் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.