• June 7, 2025
  • NewsEditor
  • 0

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை மணிக்கூண்டு பகுதியில் கிளினிக் நடத்தி வந்தவர் டாக்டர் கனகரத்தினம். இவருடைய மனைவி ராஜலட்சுமி. இவர்களுக்கு மூன்று மகள்கள், ஒரு மகன். மகள்களுக்குத் திருமணமாகி வெவ்வேறு பகுதிகளில் வசிக்கின்றனர். மகன் சுவாமிநாதன் மற்றும் மருமகள் வர்ஷா சுவாமிநாதன் ஆகியோரும் மருத்துவர்களே.

மனைவியுடன் பட்டுக்கோட்டை டாக்டர் ரத்தினம்

பத்து ரூபாய் டாக்டர் ரத்தினம்

டாக்டர் கனரத்தினத்தை எல்லோரும் `பத்து ரூபாய் டாக்டர்’ என்றும் சுருக்கமாக டாக்டர் ரத்தினம் என்றும் அழைத்தனர். மகப்பேறு மருத்துவரான இவர், தன் பணியை தொடங்கியது முதல் மறைவு வரை ரூ.10 மட்டும் பீஸ் வாங்கியதால் பத்து ரூபாய் டாக்டர் என இவரை அன்புடன் அழைத்தனர் பட்டுக்கோட்டை மக்கள்.

96 வயதான இவர் வயது மூப்பு காரணமாக இன்று மறைந்தார். இவரது இறுதி சடங்கு நாளை பட்டுக்கோட்டையில் நடைபெறுகிறது. பத்து ரூபாய் டாக்டர் ரத்தினம் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

10 ரூபாய் இல்லனா கூட சிகிச்சை பார்ப்பார்!

இது குறித்து அப்பகுதியினரிடம் பேசினோம், “மணிக்கூண்டு பெரியத்தெருவில் T.A.K என்ற பெயரில் கிளினிக் நடத்தியவர் டாக்டர் ரத்தினம். இவர் தன்னிடம் சிகிச்சைக்காக வருபவர்களிடம் அன்பாக நடந்து கொள்வார். யாராக இருந்தாலும் ரூ.10 மட்டும் பீஸ் வாங்குவார். பத்து ரூபாய் கூட கொடுக்க முடியாத ஏழைகளும் இவரிடம் வருவார்கள். அவர்களது முகத்தை பார்த்ததும் வறுமையை உணர்ந்து பீஸ் வாங்காமல் அனுப்புவார்.

பட்டுக்கோட்டை

சிகிச்சைக்கு மாத்திரை மட்டும் போதாது மருத்துவரின் அன்பும், அக்கறையும் அவசியம் என்பார். இவர் நடந்து கொண்ட விதத்தால் `மனிதநேய மருத்துவர்’ என்கிற பெயரை மக்கள் இவருக்கு கொடுத்தனர். பட்டுக்கோட்டையின் அடையாளமாகவும் மாறினார்.

கிட்டதட்ட 65,000 பிரசவம் பார்த்த டாக்டர் என்பது இவருக்கான சிறப்பு. கைராசிக்காரர் என மக்களால் நேசிக்கப்பட்டவர். இவருக்கு சொந்தமான வணிக வளாகத்தில் பலர் கடைகள் வைத்துள்ளனர்.

இந்தியா, சீனா போர் நடந்தபோது..!

கொரோனா லாக்டெளன் சமயத்தில் கடை நடத்த முடியவில்லை. உடனே கடை உரிமையாளர்கள் வாடகை கொடுக்க முடியாமல் தவித்தனர். இதையறிந்த ரத்தினம் மூன்று மாத வாடகை தர வேண்டாம் என்றார். இதை கேட்டதும் கடை வைத்திருந்தவர்கள் நெகிழ்ந்தனர். இவரது நல்லெண்ணம் பட்டுக்கோட்டையை தாண்டி பேசு பொருளானது.

இந்தியா, சீனா போர் நடந்தபோது இந்திய அரசு போர் தளவாடங்கள் வாங்குவதற்கு போதுமான நிதி இல்லை. எனவே மக்கள் தங்களிடம் இருக்கும் பணம், நகை போன்றவற்றை அரசுக்கு கொடுத்து உதவுங்கள், 5 வருடம் கழித்து அவற்றைத் திருப்பி தந்துவிடுவதாக அறிவித்தனர்.

பட்டுக்கோட்டை டாக்டர் ரத்தினம்

அப்போது, உடனே தன் மகள்களின் திருமணத்துக்காக சேமித்து வைத்திருந்த 83 பவுன் நகையை மத்திய அரசிடம் கொடுத்துள்ளார். இதன் மூலம் சிறந்த குடிமகனாகவும் பாராட்டை பெற்றார். வயது மூப்பாக இருந்தாலும் ஓரளவுக்கு தன் வேலையை தானே செய்யக்கூடிய வகையில் ஆரோக்கியமாக இருந்தார். மருத்துவத் துறையில் மனித நேயத்துடன் சேவையாற்றிய ரத்தினம் ஒரு டாக்டர் இப்படிதான் இருக்க வேண்டும் எடுத்து காட்டாக வாழ்ந்திருக்கிறார்.

தஞ்சாவூரை சேர்ந்த டாக்டர் முரளி என்பவர், சிகிச்சைக்கு வருபவர்களிடம் பீஸே வாங்குவதில்லை. இதற்கான விதை டாக்டர் ரத்தினம் சாரிடமிருந்து கிடைத்தது என்கிறார் டாக்டர் முரளி. தன்னை போலவே டாக்டர்களான மகன் சுவாமிநாதன் மருமகள் வர்ஷாவையும் உருவாக்கியிருக்கிறார். மண்ணுக்கும், மக்களுக்கும் மருத்துவ சேவையாற்றிய டாக்டர் ரத்தினம் இப்போது எங்களை விட்டு சென்றது எங்களுக்கு பேரிழப்பு. அவர் செய்த பணிகளால் மக்கள் மனதில் காலத்துக்கும் அவர் நிறைந்திருப்பார். எங்கள் உயிர் உள்ளவரை அவரை நாங்கள் மறக்க மாட்டோம்” என்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *