
‘பியூஷ் சாவ்லா ஓய்வு!’
பியூஷ் சாவ்லா அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார். கிரிக்கெட் ரசிகர்களை பொறுத்தவரைக்கும் இது ஒரு ‘சிவாஜி செத்துட்டாரா…’ மொமண்ட்தான். ஏனெனில், பியூஷ் சாவ்லாவையெல்லாம் அத்தனை வருடங்களாக கிரிக்கெட்டில் பார்த்திருக்கிறோம். நாம் ஸ்கூல் படிக்கும் போது கிரிக்கெட் ஆடிக்கொண்டிருந்தார்.
காலேஜ் படிக்கும் போது கிரிக்கெட் ஆடினார். இப்போது வேலைக்கு வந்து நமக்கே வயதாகும் ஃபீல் வந்துவிட்டது. இப்போதுதான் அவர் ஓய்வை அறிவித்திருக்கிறார். பியூஷ் சாவ்லாவின் இன்ஸ்டா போஸ்ட்டை பார்க்கையில் மண்டையை சுற்றி கணித பார்முலாக்கள் ஓடும் விசித்திர மனநிலைதான் உண்டாகிறது. அதே மனநிலையோடு 2011 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியில் பியூஷ் சாவ்லாவோடு இணைந்து ஆடியவர்களெல்லாம் இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என பார்த்துவிடுவோம்.
‘தோனி!’
முதலில் அந்த அணியின் கேப்டன் தோனி. ‘அந்த 2 நாள் மட்டும் சின்ராச கையிலயே பிடிக்க முடியாது…’ என்பது போல வருடத்தில் 2-3 மாதங்கள் ஜோராக ஐ.பி.எல் இல் ஆடிக்கொண்டிருக்கிறார். மற்ற சமயங்களில் ‘வாழா…என் வாழ்வை வாழவே..’ என 96 ராம் பாணியில் பைக் ரைடு, போட்டோகிராபி, பேமிலி டூர் என வாழ்ந்துகொண்டிருக்கிறார். எல்லாவற்றுக்கும் மேல் ‘கடவுள் எனும் விவசாயி…’ என டேப் ரெக்கார்டில் பாட்டை தட்டிவிட்டு ஸ்ட்ராபெரி விவசாயம் பார்க்க சென்றுவிடுவார்.

‘சேவாக்!’
அதிரடி ஓப்பனரான சேவாக் கல்வி தந்தையாக மாறும் வேலையில் ஈடுபட்டிருக்கிறார். ஹரியாணாவில் சேவாக் இண்டர்நேஷனல் ஸ்கூல் என்ற பெயரில் ஒரு பள்ளியை நடத்தி வருகிறார். அவ்வபோது கிரிக்கெட் கமெண்ட்ரி, போர் அடிக்கும்போது ட்விட்டரில் கொஞ்சம் வன்மத்தை கக்குவது என ஓய்வு வாழ்க்கையை அர்த்தப்பூர்வமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
‘கம்பீர்!’
தன்னை ஒரு இந்தியன் தாத்தாவாக நினைத்துக் கொண்டு இந்திய அணிக்குள் பயிற்சியாளராக புகுந்து சிஸ்டமை க்ளீன் செய்யும் பணிகளை செய்து வருகிறார் கம்பீர். இடையில் கிழக்கு டெல்லியின் எம்.பி, எம்.பி ஆக இருக்கும் போதே கமெண்டேட்டர், லக்னோ & கொல்கத்தா போன்ற அணிகளின் ஆலோசகர் என மல்டி டாஸ்க்கிங் செய்துகொண்டிருந்தார்.

‘சச்சின் டெண்டுல்கர்!’
சச்சின் டெண்டுல்கர் இப்போது மும்பை இந்தியன்ஸ் அணியில் ஆலோசகராக இருக்கிறார். அவரின் பிறந்த நாள் போன்ற சமயங்களில் இந்தியா முழுவதுமிருந்தும் ரசிகர்களை வரவழைத்து புகைப்படம் எடுத்துக் கொள்கிறார். வயசானாலும் அந்த ஸ்டைல் இன்னும் போகவில்லை என்பதை நிரூபிக்க Road Safety Series, Legends League போன்றவற்றில் இன்னமும் ஸ்ட்ரைட் ட்ரைவ் ஆடிக்கொண்டிருக்கிறார்.
‘அஷ்வின்!’
இந்திய அணிக்காக உலகக்கோப்பையை வென்ற வீரர்களில் ஒருவர் என கூறுவதை விட, ஒரு ஸ்போர்ட்ஸ் யூடியூபர் என்றுதான் அஷ்வினுக்கு அறிமுகம் கொடுக்க வேண்டும். எல்லாவிதமான சர்வதேசப் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெற்றுவிட்டார். ஐ.பி.எல் இல் சென்னை அணிக்காக கம்பேக் கொடுத்து சென்னை அணியின் ரசிகர்களே `போதும் அஷ்’ என சொல்லுமளவுக்கு தான் பெர்ஃபார்ம் செய்தார். ஆனாலும் தளராத மனதோடு இப்போது TNPL இல் திண்டுக்கல் அணிக்காக ஆடி வருகிறார்.

‘யுவராஜ்!’
2011 உலகக்கோப்பையின் நாயகன் யுவராஜ்தான். ‘உனக்கு இன்னும் நல்லது நடந்துருக்கலாம்ப்பா..’ என ரசிகர்கள் இன்றைக்கும் வருத்தப்படும் வீரர். கேன்சரால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்து கம்பேக் கொடுத்தார். ஆனால், செகன்ட் இன்னிங்ஸில் அவரால் அந்தளவுக்கு சோபிக்க முடியவில்லை. 2019 வாக்கில் ஓய்வை அறிவித்துவிட்டார். இப்போது Youwecan என்ற பெயரில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஒரு அறக்கட்டளையை நடத்தி வருகிறார். கில், அபிஷேக் சர்மா போன்ற இளம் வீரர்களுக்கு வழிகாட்டும் தரமான வேலையையும் செய்து வருகிறார்.
‘ரெய்னா!’
சுரேஷ் ரெய்னா ஐ.பி.எல் இல் சென்னை அணிக்காக விளையாடி வந்தவர். இப்போது அப்படியே முழுக்க முழுக்க கமெண்ட்ரி பக்கமாக சென்றுவிட்டார். இந்தி கமெண்ட்ரியின் முக்கியமான முகமாக இருக்கிறார். அடுத்த சீசனில் சென்னை அணியின் பேட்டிங் பயிற்சியாளராக வருவேன் என சூசகமாகவும் கூறியிருக்கிறார்.

‘யூசுப்!’
யூசுப் பதான், ஒரு காலத்தில் எதிரணியினரை தன்னுடைய பெரிய சிக்சர்களால் திணறடித்தவர். இப்போது அரசியலில் குதித்து விட்டார். திரிணாமூல் காங்கிரஸ் சார்பில் எம்.பியாக இருக்கிறார்.

‘ஹர்பஜன் சிங்!’
ஹர்பஜன் சிங், இப்போது முழு நேர கமெண்டேட்டராகவும் பார்ட் டைம் ராஜ்யசபா எம்.பியாகவும் இருக்கிறார். (எம்.பி ஆக இருக்குறவங்க கமெண்ட்ரி பண்ணக்கூடாதுன்னு ஒரு மசோதா தாக்கல் பண்ணுங்க பாஸ்…)
‘ஜாகீர் கான் & நெஹ்ரா
ஜாகீர் கான் ஓய்வுக்குப் பிறகு மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளர் குழுவில் முக்கியப் பொறுப்பில் இருந்தார். இப்போது லக்னோ அணியின் பயிற்சியாளர் குழுவில் இருக்கிறார். நெஹ்ராவும் இதே கேட்டகரிதான். பவுண்டரி லைனில் ஒற்றை இளநீரை கையில் பிடித்துக் கொண்டு பயிற்சியாளராக பல அணிகளையும் அலறவிட்டிருக்கிறார்.

‘முனாஃப் படேல்!’
முனாஃப் படேலில் மிதவேக பந்துவீச்சுக்கு அப்போது ஒரு ரசிகர் வட்டம் உண்டு. 2011 உலகக்கோப்பையில் நிறைய எக்கனாமிக்கலான ஸ்பெல்களை வீசி அசத்தியிருப்பார். ஓய்வு பெற்றபிறகு லங்கா ப்ரீமியர் லீக் போன்ற வெளியூர் லீகுகளில் ஆடி வந்தார். இப்போது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக இருக்கிறார்.
‘ஸ்ரீசாந்த்!’
கிரிக்கெட்டர்களின் மறுவாழ்வு மையமாக இருப்பது கமெண்ட்ரி பாக்ஸ்கள்தான். அந்த வகையில் சூதாட்டப்புகாரில் கிரிக்கெட் ஆட தடையெல்லாம் விதிக்கப்பட்ட ஸ்ரீசாந்தும் தடையை முடித்துக் கொண்டு மைக்கை பிடித்துவிட்டார். அவ்வபோது தமிழ் கமெண்ட்ரியிலும் எட்டிப் பார்ப்பார்.

‘விராட் கோலி!’
அந்த உலகக்கோப்பையில் ஆடியதில் இன்னமும் இந்திய அணியில் ஆடிக்கொண்டிருக்கும் ஒரே வீரர் விராட் கோலிதான். 2027 உலகக்கோப்பையை டார்கெட்டாக வைத்து ஆடிக்கொண்டிருக்கிறார். சச்சினுக்கு 2011 உலகக்கோப்பை போல கோலிக்கு 2027 உலகக்கோப்பை இருக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பம். ஆனால், கம்பீர் என்ன செய்ய காத்திருக்கிறாரோ!!

‘பியூஷ் சாவ்லா!’
கடைசியாக பியூஷ் சாவ்லா. நடப்பு ஐ.பி.எல் சீசனிலும் ஆட வேண்டும் என்பதுதான் அவருடைய எண்ணம். அதற்காக ஏலத்துக்கு முன்பு நடந்த சையது முஷ்தாக் அலி டிராபியிலெல்லாம் ஆடினார். ஆனாலும் எந்த அணியும் சீண்டவில்லை. ரீப்ளேஸ்மெண்ட்டாக செல்ல கூட வாய்ப்பிருக்கிறது என காத்திருந்தாரோ என்னவோ, ஐ.பி.எல் முடிந்தவுடன் ஓய்வை அறிவித்துவிட்டார்.!
2011 உலகக் கோப்பை தொடரின் உங்கள் ஃபேவரேட் வீரர் யார் என்பதை கமெண்ட்டில் சொல்லுங்க மக்களே..!