
“வெளியில தலைக்காட்ட முடியல… ஓட்டுப் போட்ட மக்களுக்கும் பதில் சொல்ல முடியல. அடுத்த தேர்தலுக்கு வார்டுக்குள்ள ஓட்டுக் கேட்டுப் போறதே சிரமமாகிடும் போலிருக்கு” – இப்படிப் புலம்புகிறவர்கள் வேறு யாருமல்ல… வேலூர் மாநகராட்சியில் இருக்கும் திமுக-வின் நான்கு மண்டலக்குழு தலைவர்களும் தான். இவர்களை இப்படி புலம்ப வைத்திருப்பவர் திமுக-வைச் சேர்ந்த மேயர் சுஜாதா!
திமுக வசமிருக்கும் வேலூர் மாநகராட்சியில் மேயர், துணை மேயர் 4 மண்டலங்களின் தலைவர்கள் என அனைத்தையும் திமுக-வே கைப்பற்றி வைத்திருக்கிறது. இருந்த போதும், அதிகாரத்துக்கு வந்து மூன்று ஆண்டுகளாகியும் மாநகராட்சியில் பேர் சொல்லும்படியாக எந்தக் காரியமும் நடக்கவில்லை என ஆளும் கட்சி கவுன்சிலர்களே புலம்புகிறார்கள். மக்களின் குறைகளை எடுத்துச் சொல்லி திட்டங்களை செயல்படுத்தலாம் என்றால் மாமன்றக் கூட்டத்தையே 3 அல்லது 4 மாதங்களுக்கு ஒருமுறைதான் கூட்டுகிறாராம் மேயர் சுஜாதா.