
அதிமுக ஆட்சி காலத்தில் (2011 – 2021) சுமார் எட்டாண்டு காலம் பவர்ஃபுல் அமைச்சராக வலம் வந்தவர் புதுக்கோட்டை சி.விஜயபாஸ்கர். அப்போது சுகாதாரத்துறைக்கு அமைச்சராக இருந்த இவர், குட்கா முறைகேடு, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா, வருமானத்துக்கு அதிகமாக சொத்துச் சேர்ப்பு, தனியார் மருத்துவக் கல்லூரிக்கு விதிகளை மீறி அனுமதி அளித்தது, கரோனா உபகரணங்கள் வாங்கியதில் முறைகேடு என அடுக்கடுக்கான சர்ச்சைகளில் சிக்கினார். இத்தனை சர்ச்சைகளில் சிக்கியவர், இப்போது இருக்கும் இடம் தெரியாமல் இருக்கிறார். திமுக-வும் இவரைக் கண்டும் காணாமல் இருக்கிறது.
2021 சட்டப்பேரவைத் தேர்தலில் விஜயபாஸ்கருக்கு எதிரான பிரச்சினைகளை எல்லாம் அடுக்கி பிரச்சாரம் செய்த திமுக, “கழக ஆட்சி வந்ததும் கம்பி எண்ண வேண்டி இருக்கும்” என கர்ஜனை செய்தது. அதன்படியே ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு விஜயபாஸ்கருக்கு எதிராக விறு விறு நடவடிக்கைகள் இருக்கும் என அனைவரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், வருடம் நான்காகியும் அப்படி எந்த நடவடிக்கையும் பாய்ந்ததாக தெரியவில்லை.