
இந்தியா மட்டுமல்லாது உலகில் தலைசிறந்த பேட்ஸ்மேன் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒன் ஆஃப் தி பெஸ்ட் கேப்டன் விராட் கோலி.
கடந்த சில ஆண்டுகளாக டெஸ்ட் போட்டிகளில் ஃபார்மில் இல்லாத கோலி, கடைசியாக விளையாடிய நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கெதிரான டெஸ்ட் தொடரில் பெரும் ஏமாற்றம் அளித்தார்.
இவ்வாறிருக்க, வரும் 20-ம் தேதி இங்கிலாந்துக்கெதிராக இந்திய அணி டெஸ்ட் தொடரில் விளையாடவிருக்கும் நிலையில், டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறப்போவதாகப் பேச்சுக்கள் அடிபட்டது.
அந்த நேரத்தில் பல முன்னாள் வீரர்களும் கோலி அப்படிச் செய்யக்கூடாது, டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அவர் தேவை என்று கூறிவந்தனர்.
ஆனால், மே 12-ம் தேதி திடீரென டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்தார். இந்த நிலையில், கோலி ஓய்வுபெறுவார் என்பதை முன்பே கணித்ததாக ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மார்க் டெய்லர் கூறியிருக்கிறார்.
கோலி குறித்து LiSTNR ஸ்போர்ட் பாட்காஸ்டில் பேசிய மார்க் டெய்லர், “கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாலில் (பார்டர் கவாஸ்கர் தொடர்) வித்தியாசமான கோலியை நான் பார்த்தேன்.
அவர் கோபமாக இருந்தார். அப்படியான கோலியை நான் ஒருபோதும் பார்த்ததில்லை.
சவாலளிக்கக்கூடிய கோலியைத்தான் பார்த்திருக்கிறேன். எப்போதும் அத்தகைய ஜென்டில்மேனைத்தான் பார்த்திருக்கிறேன்.

ஆனால், கடந்த ஆண்டு அவர் வித்தியாசமாக இருந்தார். அவர் ஓய்வு பெற வேண்டிய நேரம் இது என்று ஒரு மாதத்துக்கு முன்பே நான் சொன்னேன்.
ஏனெனில், ஒரு முறை நீங்கள் கோபப்பட்டால் அடுத்து நீங்கள் வெளியேற வேண்டியதுதான்.
அதை அவர் புரிந்து கொண்டார் என்று நினைக்கிறேன். பலரைப்போலவே கடந்த ஆண்டு கோலியைப் பார்த்து நானும் ஏமாற்றமடைந்தேன்.
ஏனெனில் எப்போதும் நான் அவரது ரசிகனாக இருந்தேன்.” என்று கூறினார்.