
எழுத்தாளர் அகிலன், கல்கியில் தொடராக எழுதிய ‘பாவை விளக்கு’ கதையை அதே பெயரில் சினிமாவாக இயக்கினார், ஏ.பி.நாகராஜன். சிவாஜி, பண்டரிபாய், குமாரி கமலா, சவுகார் ஜானகி, எம்.என்.ராஜம் நடிப்பில் அந்தப் படம் உருவாகிக் கொண்டிருக்கும்போதே, அகிலன் எழுதிய ‘வாழ்வு எங்கே?’ நாவலையும் திரைப்படமாக்க, திருப்பூர் ஸ்பைடர் என்ற பனியன் நிறுவனம் அதன் உரிமையை பெற்றது. ஸ்பைடர் பிலிம்ஸ் மூலம் அதை ‘குலமகள் ராதை’ என்ற பெயரில் தயாரிக்க, அதையும் ஏ.பி.நாகராஜனே திரைக்கதை, வசனம் எழுதி இயக்கினார்.
தவறான புரிதல் காரணமாக வீட்டையும் காதலி ராதையையும் விட்டு வெளியேறி, சர்க்கஸ் ஒன்றில் சேர்கிறார், அச்சக தொழிலாளியாக நாயகன் சந்திரன். அங்கு அவர் சர்க்கஸ் கலைஞரான லீலாவைக் காதலிக்கிறார். ஒரு நிகழ்ச்சியின் போது, பார்வையாளராக வரும் காதலி ராதையைக் கண்டதும் தன்னை மறந்து சர்க்கஸின்போது கீழே விழுந்து விடுகிறார்.