
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 2016-ம் ஆண்டு ஏற்கெனவே இருந்த ரூ.500, 1000 நோட்டுக்களை திரும்ப பெற்றுக்கொண்டது.
பணமதிப்பிழப்பு என்ற பெயரில் கொண்டுவரப்பட்ட இத்திட்டத்தால் புதிதாக 200, 500, 2000 ரூபாய் நோட்டுகள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
மத்திய அரசு ஏற்கெனவே 2000 ரூபாய் நோட்டுக்களை கணிசமான அளவு திரும்ப பெற்றுக்கொண்டது. இதனால் 2000 ரூபாய் நோட்டுக்களை புழக்கத்தில் பார்ப்பது அரிதாக உள்ளது.
பணமதிப்பிழப்பு அறிமுகம் செய்யப்பட்டு 10 ஆண்டுகள் கடந்த நிலையில், புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட 500 ரூபாய் நோட்டும் திரும்ப பெறப்படும் என்று புதிய ஒரு தகவல் வேகமாக பரவி வருகிறது. `கேபிட்டல் டிவி’ என்ற யூடியூப் சேனலில் இது தொடர்பாக ஒரு வீடியோ வெளியாகி இருக்கிறது.
அந்த வீடியோவில் வரும் மார்ச் மாதத்தில் இருந்து படிப்படியாக 500 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 12 நிமிடம் ஓடக்கூடிய அந்த வீடியோவை இதுவரை 5 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். இந்த வீடியோ மக்கள் மத்தியில் புதிய குழப்பத்தை உருவாக்கியுள்ளது.
இது தொடர்பாக ரிசர்வ் வங்கி கொடுத்துள்ள விளக்கத்தில், “அதில் 500 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படமாட்டாது. மக்கள் தவறான தகவலை நம்பவேண்டாம். அரசு தகவல்களை பார்த்து உறுதி செய்து கொண்டு தகவல்களைபகிருங்கள். தவறான தகவலை பகிர வேண்டாம்” என்று தெரிவித்துள்ளது.