
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம்குமாரின் மகன் தர்ஷன் ராம்குமார் கணேசன் திருமணம் நாளை சென்னையில் நடக்கிறது. திருமணத்தையொட்டிய சங்கீத் நிகழ்ச்சி இன்று நடைபெறவிருக்கிறது.
மறைந்த நடிகர் சிவாஜிக்கு தேன்மொழி, சாந்தி என இரண்டு மகள்கள் மற்றும் ராம்குமார், பிரபு என இரண்டு மகன்கள்.
மூத்த மகன் ராம்குமாருக்கு துஷ்யந்த் மற்றும் இரட்டைக் குழந்தைகளான தர்ஷன் மற்றும் ரிஷ்யன் என மூன்று மகன்கள். துஷயந்த் ‘சக்சஸ்’ படத்தின் மூலம் சினிமாவுக்கு வந்தது நினைவிருக்கலாம். தொடர்ந்து சில படங்களிலும் நடித்தாலும் எதிர்பார்த்த அளவு சினிமா கைகொடுக்காத போதும், இப்போதும் சினிமா முயற்சியைக் கைவிடவில்லை என்கிறார்கள்.
துஷயந்துக்குப் பிறகு பிறந்தவர்கள் இரட்டையர்களான தர்ஷன் மற்றும் ரிஷயன். இவரகளில் ரிஷ்யன் வெளிநாட்டில் படித்து விட்டு அங்கேயே ஒரு நிறுவனத்தில் பணி புரிந்து வருவதாகக் கூறப்படுகிறது.
தர்ஷனுக்குமே சினிமா ஆர்வம் வர புனே திரைப்படக் கல்லூரி மற்றும் டெல்லி நேஷனல் ஸ்கூல் ஆஃப் ட்ராமா ஆகிய இடங்களில் பயிற்சி எடுத்திருக்கிறாராம். படித்துக் கொண்டிருந்த நாட்களிலேயே மேடை நாடகங்களிலும் நடித்திருப்பதாகச் சொல்கிறார்கள்.
திரைப்படப் பயிற்சி முடித்து சென்னை திரும்பியவர் கோலிவுட்டில் விரைவில் படம் பண்ணுவார் எனக் கூறுகிறார்கள்.
காதல் டு கல்யாணம்!
இந்த நிலையில் டெல்லியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் அங்கு பூஜா என்கிற பெண்ணை அவர் காதலித்ததாகத் தெரிகிறது.
தர்ஷன் பூஜா இருவருமே தங்கள் காதலை வீட்டுக்குத் தெரியப்படுத்தி முறைப்படி திருமணத்துக்கு அனுமதி வாங்கிய நிலையில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் இவர்களது திருமண நிச்சயதார்த்தம் சிம்பிளாக அன்னை இல்லத்தில் வைத்தே நடந்த்து.

ராம்குமார், பிரபு குடும்பத்துக்கு நெருக்கமான சில உறவினர்கள் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இது குறித்த செய்தி அப்போதே விகடன் தளத்தில் வெளியானது.
இந்த நிலையில் தற்போது இவர்களின் திருமணம் நடைபெறுகிறது.

மணப்பெண் வீட்டார் சார்பில் அழைப்பிதழ் அடித்து நடைபெறும் இந்தத் திருமணம் சென்னை கிண்டியிலுள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் நடக்கிறது. ‘பராத்’ என்னும் மாப்பிள்ளை அழைப்பு உட்பட அத்தனை சடங்குகளும் பெண் வீட்டார் விருப்பப்படி வட இந்திய முறைப்படி நடக்கவிருப்பதாகக் கூறுகிறார்கள்.
திருமணத்துக்கு முந்தைய சங்கீத் நிகழ்ச்சி இன்று மாலை நடக்கிறது. திருமணம் நாளை காலையும் தொடர்ந்து நாளை மதியம் வரவேற்பும் நடக்கவிருக்கிறது..
நிச்சயதார்த்தம் போலவே திருமணமும் ரொம்பவே எளிமையாகவே நடககவிருக்கிறதாம். சிவாஜி குடும்பத்துக்கு நெருக்கமான உறவினர்கள் சிலருக்கு மட்டுமே அழைப்பிதழ் அனுப்பப் பட்டிருக்கிறது.!