
புதுக்கோட்டை மாவட்டம், பூவரசங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் சரத்குமார் (28). இவர் சிங்கப்பூரில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ஸ்ரீகா (24). இவர்களுக்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இந்நிலையில், இந்த தம்பதிக்கு இரண்டரை வயதில் பெண் குழந்தை இருந்தது. இந்த சூழலில், ஆன்லைனை அதிகம் பயன்படுத்தி வந்த ஸ்ரீகா, கடந்த மூன்று மாதங்களாக, ஆன்லைன் விளையாட்டில் ஈடுபட்டு பணத்தை இழந்துள்ளார்.
இதை அறிந்த அவரது கணவர் சரத்குமார் கண்டித்துள்ளார். ஆனாலும், ஸ்ரீகா மீண்டும் ஆன்லைன் விளையாட்டில், 70,000 ரூபாயை இழந்ததாகச் சொல்லப்படுகிறது. இதனால், கோபமடைந்த சரத்குமார் மீண்டும் தனது மனைவியை கண்டித்துள்ளார்.
இதில், மனமுடைந்த ஸ்ரீகா, தனது குழந்தையின் கழுத்தை நெரித்துக் கொலை செய்து விட்டு, தானும் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை அறிந்த அவரது உறவினர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இருவரது உடல்களையும் கைப்பற்றிய போலீஸார், இந்த விவகாரம் குறித்து வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். ஆன்லைன் விளையாடியதை கணவர் கண்டித்த விரக்தியில் இளம்பெண் ஒருவர் தனது குழந்தையை கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.