• June 6, 2025
  • NewsEditor
  • 0

2024-ம் ஆண்டு மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்த நேரம் அது… தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க, மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.

அக்கட்சியின் முக்கியப் பொறுப்புகளில் இருந்தவர்கள் அந்தத் தேர்தலில் போட்டியிடாத நிலையில், ஈரோடு தொகுதிக்கு, பா.ஜ.க-வில் இருந்து விலகி, அப்போது மூன்று மாதங்களுக்கு முன்பு அ.தி.மு.க-வில் ஐக்கியமான ஆற்றல் அசோக் குமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

அப்போது பரபரப்பாகப் பேசப்பட்ட ஆற்றல் அசோக் குமார் பெயரில் இப்போது அடுத்தடுத்து மோசடி புகார்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது.

ஆற்றல் அசோக் குமார் வேட்புமனு

என்ன வழக்கு?

கோவையில் செயல்பட்டு வரும் தி இந்தியன் பப்ளிக் ஸ்கூல் நிர்வாகத்தின் நிர்வாக இயக்குநராக அசோக் செயல்பட்டு வந்தார்.

அசோக் அந்தப் பள்ளியின் ஒரு பங்கு தாரராக மட்டுமே இருந்தார். அதேநேரத்தில் போலி ஆவணங்கள் மூலம் முறைகேட்டில் ஈடுபட்டு, பள்ளிக்கு நஷ்டம் ஏற்படுத்தியதாக அவர் மீது புகார் எழுந்தது.

இதையடுத்து அசோக் குமார் கடந்த மார்ச் மாதம் பள்ளியின் நிர்வாக இயக்குநர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

புதிய நிர்வாக இயக்குநராகப் பதவியேற்ற சிவசங்கரன் கோவை மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையில் அசோக் குமார் மீது புகார் அளித்தார்.

அந்தப் புகாரில், “பள்ளி நிர்வாக பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட பிறகும் அசோக் குமார், பள்ளிக்குப் புதிதாக 45 பேருந்துகள் வாங்குவதற்கு வங்கிகளின் கடன் பெற்றுள்ளார்.

இதற்கு அவர் போலி ஆவணங்களை உருவாக்கியுள்ளார். மேலும் பேருந்துக்கு அதிக தொகையைச் செலவிட்டு பள்ளிக்கு நஷ்டம் ஏற்படுத்தியுள்ளார்.

இப்படி பல்வேறு முறைகேடுகளால் அவர் ரூ.40 கோடிக்கு கையாடல் செய்துள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று கூறியிருந்தார்.

இதேபோல அசோக் குமார் மீது சில புகார்கள் எழுந்துள்ளன. அதனடிப்படையில் அசோக் மீது தனித்தனியாக 4 எஃப்.ஐ.ஆர்கள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

ஆற்றல் அசோக் குமார் - எடப்பாடி பழனிசாமி
ஆற்றல் அசோக் குமார் – எடப்பாடி பழனிசாமி

சரி, யார் இந்த ஆற்றல் அசோக் குமார்?

அ.தி.மு.க குடும்பப் பின்னணியைக் கொண்ட ஆற்றல் அசோக் குமாரின் தாய் செளந்திரம், 1991-ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அப்போதைய திருச்செங்கோடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

அமெரிக்காவில் உயர்கல்வியை முடித்துவிட்டு அங்கேயே மைக்ரோசாஃப்ட் போன்ற பெரு நிறுவனங்களில் பணியாற்றி வந்தார் ஆற்றல் அசோக் குமார்.

உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் பல கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறார். தற்போதைய மொடக்குறிச்சி பா.ஜ.க எம்.எல்.ஏ-வான சரஸ்வதியின் மகளைத் திருமணம் செய்துகொண்டு, வாழ்ந்து வந்த நிலையில் சமீபத்தில் அவர் உடல் நலம் சரியில்லாமல் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2021 முதல் ஆற்றல் என்ற பெயரில் அறக்கட்டளை தொடங்கியதுடன், தனது மாமியார் சரஸ்வதியுடன் இணைந்து பா.ஜ.க-வில் தீவிரமாகப் பணியாற்றி வந்தார் அசோக் குமார்.

பா.ஜ.க மாநில ஓ.பி.சி அணித் தலைவராகவும் அசோக் குமாருக்குப் பொறுப்பு வழங்கப்பட்டது.

மக்களவைத் தேர்தலில் ஈரோடு தொகுதியைப் பெற்றுவிட வேண்டும் என அப்போது தொகுதி முழுக்க மருத்துவ முகாம் நடத்துவது, பழைய கோயில்களைத் தனது சொந்த பணத்தில் புனரமைத்துத் தருவது, 10 ரூபாய்க்கு உணவு என அசோக் குமார் பம்பரமாகச் சுழன்று வந்தார்.

ஆற்றல் அசோக் குமார்
ஆற்றல் அசோக் குமார்

ஆனால், எந்த நிகழ்ச்சிகளிலும் பா.ஜ.க-வின் கொடிகளையோ அல்லது பிரதமர் மோடி அல்லது அப்போதைய மாநிலத் தலைவர் அண்ணாமலையின் பெயரையோ அசோக் குமார் பயன்படுத்துவதில்லை.

தன்னையும் தனது ஆற்றல் அறக்கட்டளையையும் மட்டுமே முன் நிறுத்துகிறார் என்று அசோக் குமார் மீது மாநிலத் தலைமைக்குப் புகார்கள் தொடர்ந்து சென்றன.

இந்த புகார் அடிப்படையில் அவர் ஓரங்கப்பட்டப்பட்டார். இதைத் தனது மாமியாரும், எம்.எல்.ஏ-வுமான சரஸ்வதியிடம் கொண்டு சென்றபோது, அவரும் கட்சிக்கு ஆதரவாகப் பேசியுள்ளதாகத் தெரிகிறது.

இதனால், அதிருப்தியடைந்த அசோக் குமார், பா.ஜ.க-வில் இருந்து விலகி அ.தி.மு.க-வில் ஐக்கியமானார். பின்னர் அ.தி.மு.க வேட்பாளர் ஆகி, தேர்தலைச் சந்தித்தது எல்லாம் தெரிந்த கதை.

தேர்தலுக்காக ஆற்றல் அசோக் குமார் தாக்கல் செய்த வேட்புமனுவில் அவர் குறிப்பிட்டிருந்த சொத்துமதிப்புகள் அப்போது பேசு பொருளானது.

வேட்பு மனுவுடன் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தில், “ஆற்றல் அறக்கட்டளை நடத்தி வரும் அசோக் குமார் பெயரில் மட்டும் ரூ.526 கோடிக்கு அசையும் சொத்துகள் உள்ளன.

அசோக்குமார் மனைவி பெயரில் ரூ.47 கோடிக்கு அசையும் சொத்துகள் உள்ளன.

ஆற்றல் அசோக்குமார்
ஆற்றல் அசோக் குமார்

அசோக்குமார் பெயரில் ரூ.57 கோடிக்கு அசையா சொத்துகளும், மனைவி பெயரில் ரூ.22 கோடிக்கு அசையா சொத்துகளும் உள்ளன.

ரூ.653 கோடி வைத்துள்ள அசோக் குமாருக்குச் சொந்தமாக ஒரு கார், பைக் கூட இல்லை,” எனத் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

அசோக்குமார் மற்றும் அவரது மனைவியிடம் தலா 10 கிலோ தங்கம் இருப்பதாகவும் பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஈரோடு மட்டுமின்றி திண்டுக்கல், கோவை, தாராபுரம் உள்ளிட்ட பல இடங்களில் அசோக்குமாருக்கு அசையா சொத்துகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *