
பெங்களூரு: ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தின்போது பெங்களூரு சின்னசாமி மைதானத்துக்கு வெளியே 11 பேர் உயிரிழந்தது தொடர்பாக கர்நாடக மாநில கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் மீது போலீஸார் கட்டாய நடவடிக்கை எடுக்கக் கூடாது என அம்மாநில உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
கர்நாடகா மாநில கிரிக்கெட் சங்கத்தின் (KSCA) தலைவர் ரகுராம் பாட், செயலாளர் ஏ. சங்கர், பொருளாளர் இ.எஸ். ஜெயராமன் ஆகியோர் தங்களுக்கு எதிராக பதியப்பட்டுள்ள எப்ஐஆர்-ஐ ரத்து செய்ய வேண்டும் என்று கோரி அம்மாநில உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.ஆர்.கிருஷ்ணகுமார், கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் மீது கட்டாய நடவடிக்கை எடுக்க இடைக்கால தடை விதித்து, வழக்கு விசாரணையை ஜூன் 16-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.