• June 6, 2025
  • NewsEditor
  • 0

இந்தியாவில் ஈவென்ட் மற்றும் பொழுதுபோக்குத் துறை அபரிமிதமான வளர்ச்சியை அடைந்து வருகிறது. திரையரங்குகள் முதல் பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள், கருத்தரங்குகள் உள்ளிட்ட பொழுதுபோக்க நிகழ்ச்சிகள் எனப் பல்வேறு நிகழ்வுகள் நாடெங்கும் தினசரி நடைபெறுகின்றன. இந்த நிகழ்வுகளுக்கான அணுகலை எளிதாக்கும் ஒரு முக்கிய அம்சம் `டிக்கெட் முன்பதிவு’ முறையாகும். கடந்த சில ஆண்டுகளில், இந்தத் துறை குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைக் கண்டுள்ளது, குறிப்பாக டிஜிட்டல்மயமாக்கலின் தாக்கத்தால்.  ஒரு புறம் திறன்பேசியின் வளர்ச்சி, இன்னொரு புறம் 4ஜி,5 ஜி இணைய வேகத்தால் இந்தத்துறை நல்ல வளர்ச்சியை அடைந்துவருகின்றது.

முன்னர், நிகழ்வுகளுக்கான டிக்கெட்டுகளைப் பெறுவது என்பது பெரும்பாலும் நேரடி கவுண்டர்களில் நீண்ட வரிசையில் நிற்பதையும், சில சமயங்களில் டிக்கெட் கிடைக்குமா என்ற நிச்சயமற்ற தன்மையையும் கொண்டிருந்தது. ஆனால், இணையம் மற்றும் ஸ்மார்ட்போன்களின் பரவலான பயன்பாடு இந்த நிலையை அடியோடு மாற்றியுள்ளது. இன்று பல ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு தளங்கள் சந்தையில் ஆதிக்கம் செலுத்துகின்றன. இந்த தளங்கள் பல்வேறு வகையான நிகழ்வுகளுக்கான டிக்கெட்டுகளை ஒரே இடத்தில் வழங்குகின்றன, இது பயனர்களுக்கு மிகவும் வசதியாக உள்ளது.

சந்தை புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவின் ஆன்லைன் நிகழ்வு டிக்கெட் முன்பதிவு சந்தை தொடர்ந்து வளர்ந்து வருகிறது. 2024 ஆம் ஆண்டில் இதன் மதிப்பு பல பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியுள்ளது என்றும், அடுத்த சில ஆண்டுகளில் இது மேலும் கணிசமாக வளரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணங்கள்:

* அதிகரித்து வரும் இணையப் பயன்பாடு மற்றும் ஸ்மார்ட்போன் ஊடுருவல்

* இளம் தலைமுறையினரிடையே நிகழ்வுகளில் பங்கேற்கும் ஆர்வம் அதிகரிப்பு

* நகர்ப்புறங்களில் பெருகிவரும் பொழுதுபோக்கு மையங்கள் மற்றும் நிகழ்வுகள்

* ஆன்லைன் கட்டண முறைகளின் எளிமை மற்றும் பாதுகாப்பு

எல்லாமே செல்பேசி அடிப்படையில் இயங்குவதால் வீட்டிலிருந்தோ அல்லது பயணத்தின்போதோ எந்த நேரத்திலும், எந்த இடத்திலிருந்தும் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். நீண்ட வரிசைகளில் நிற்க வேண்டிய அவசியமில்லை.

நிகழ்வுகளுக்கு முன்கூட்டியே டிக்கெட் முன்பதிவு செய்வதன் மூலம், கடைசி நிமிட ஏமாற்றங்களைத் தவிர்க்கலாம். பல ஆன்லைன் தளங்கள் ஆரம்பகால முன்பதிவு சலுகைகள், தள்ளுபடிகள் மற்றும் கேஷ்பேக் போன்ற சிறப்பு சலுகைகளை வழங்குகின்றன.

நிகழ்வு நடைபெறும் இடம், நேரம், கலைஞர்கள், டிக்கெட் விலை மற்றும் விதிமுறைகள் போன்ற அனைத்து தகவல்களும் தெளிவாகக் கிடைக்கின்றன. மிக முக்கியமாக எளிதான ரத்துசெய்தல் மற்றும் பணத்தைத் திரும்பப் பெறுதல் ஆகியவை இருப்பதால் மக்களின் நம்பிக்கையும் இதில் அதிகரித்திருக்கிறது.

இந்தியாவில் நிகழ்வு டிக்கெட் முன்பதிவுத் துறை மேலும் பல புதுமைகளைக் காண உள்ளது. மெய்நிகர் நிகழ்வுகள் (Virtual Events) மற்றும் கலப்பின நிகழ்வுகள் (Hybrid Events) பிரபலமடைந்து வருவதால், அவற்றுக்கான டிக்கெட் முன்பதிவு முறைகளும் உருவாகி வருகின்றன.

டிக்கெட் 9 – தமிழகத்தின் பங்களிப்பு

டிக்கெட் முன்பதிவுத்துறையில் பெரிய நிறுவனங்கள் கோலோச்சிவரும் நிலையில், தமிழகத்தில் இருந்தும் டிக்கெட் 9 நிறுவனம் இந்தத்துறையில் தனக்கான இடத்தைப் பெற்று முதலீட்டாளர்களின் கவனத்தையும் ஈர்த்து சந்தையில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளது. இந்த நிறுவனத்தின் நிறுவனர்களான யாழினி சண்முகம் மற்றும் சந்தோஷ் ஆகியோரின் டிக்கெட் 9  சாகசத்தைத்தான் பார்க்கப்போகின்றோம்…

“Ticket 9 ஆரம்பிக்கும் போது, இந்திய மற்றும் குறிப்பாக தமிழ்நாட்டின் நிகழ்வு டிக்கெட் சந்தையில் நீங்கள் கண்ட முக்கிய வெற்றிடங்கள் அல்லது சவால்கள் என்ன? அவற்றை நீங்கள் எவ்வாறு அடையாளம் கண்டீர்கள்?”

சந்தோஷ்: “நிகழ்வுகள் என்பது வெறும் கூட்டங்கள் அல்ல – அவை மனித உணர்வுகளின் சந்திப்பிடங்கள். கலை, கலாசாரம், உறவுகள் மற்றும் அனுபவங்கள் அனைத்தும் ஒன்றிணையும் ஒரு களம், அந்த களத்தின்  நிகழ்வு ஏற்பாட்டாளர், பங்கேற்பாளர் இருவருக்கும் தேவையான கட்டமைப்பின் அடிப்படையில் உருவானதுதான் Ticket 9.

Ticket 9 என்பது வெறும் டிக்கெட் முன்பதிவு தளம் மட்டுமல்ல , நிகழ்வுகளை சிறப்பாக நிர்வகிக்கவும், பங்கேற்பாளர்களுக்கும் மறக்க முடியாத அனுபவங்களை அளிக்கவும் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட ஒரு புதுமையான களம்.”

“தமிழ்நாட்டின் உள்ள நிகழ்ச்சிகளுக்கான சந்தையில் நீங்கள் கண்ட குறைபாடுகள்  என்ன? Ticket 9 ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணம் எப்படி தோன்றியது?”

யாழினி சண்முகம்: “எங்கள் இணை நிறுவனரான சந்தோஷுக்கு நிகழ்வுத் துறையில் அனுபவம் ஏழு ஆண்டுகள். அந்த அனுபவம்தான் எங்களுக்கு இந்தத் துறையில் உள்ள சிக்கல்களை ஆராய வைத்தது. சிறிய அளவில் நடைபெறும் நிகழ்ச்சிகள், கல்லூரி விழாக்கள், உள்ளூர் கலை நிகழ்ச்சிகள்  இவையெல்லாம் பெரிய அளவில் வளர ஒரு நம்பகமான நிகழ்ச்சிகளுக்கான பதிவிற்கு தொழில்நுட்ப  அளவிலான தீர்வு தேவைப்பட்டது. இதைத்தொடர்ந்து களப்பணி, நேரடி அனுபவங்கள், ஏற்பாட்டாளர்களுடனான ஆழமான உரையாடல்கள் – இவையெல்லாம் எங்களுக்கு இந்த வெற்றிடங்களை தெளிவாக காட்டின. பார்வையாளர்களை இயல்பாக ஈர்க்கும், முழுமையான டிக்கெட்டிங் மற்றும் மேலாண்மை அமைப்பைக் கொண்ட ஒரு உள்ளூர் தளம் உருவாக்க வேண்டும் என்பதே எங்கள் முதல் நோக்கம்.”

“Ticket 9 தளத்திற்கான தயாரிப்பு வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்ப கட்டமைப்புக்கான உங்கள் அணுகுமுறை என்ன?”

சந்தோஷ்:  “எங்கள் கொள்கை “எளிய பயன்பாடு, ஆனால் வலிமையான தொழில்நுட்பம்” என்பதாக இருந்தது.

`நிகழ்ச்சி ஏற்பட்டாளர்களுக்கான எல்லா வசதிகளுடன் கூடிய  எளிமையான` என்ற கொள்கையை முன்வைத்தோம். ஏற்பாட்டாளர்களுக்காக எளிமையான பின்புற கட்டுப்பாட்டு பலகை, தங்கள் நிகழ்வுகளை தாங்களே வெளியிட முடியும், நிர்வகிக்க முடியும்,  முழுமையாக நேரடி அறிக்கைகளை பார்க்க முடியும்.

பயனாளிகளுக்கு செல்பேசி திரையை அடிப்படையாக வைத்து  மென்பொருள் உருவாக்கினோம். எதிர்கால வளர்ச்சியை கருத்தில் கொண்டு microservice architecture கட்டமைப்பை தேர்வு செய்தோம். எங்கள் தொழில்நுட்ப அணியின் முக்கிய கவனம் – மெதுவாக ஆனால் முழுமையான எளிமையான நீடித்த வளர்ச்சிக்கான அம்சங்களை கட்டியெழுப்புவது.

“முதலீட்டாளர்களை எப்படி ஈர்த்திர்கள்?”

சந்தோஷ் : “உண்மையான சந்தை தேவை மற்றும் எதிர்கால வளர்ச்சி சாத்தியங்கள் பற்றி கவனம் செலுத்தினோம். Ticket 9 ஒரு வெறுமையான டிக்கெட் முன்பதிவு தளம் அல்ல, ஒரு முழுமையான நிகழ்வு தொழில்நுட்ப சூழலியல் தொகுப்பு என்பதை தொடர்ந்து உறுதிப்படுத்தினோம்.

எங்கள் வணிக மாதிரி, வருவாய் உருவாக்கும் SaaS மற்றும் கமிஷன் அடிப்படையில் அமைந்தது. முதல் நிலை நகரங்கள், இரண்டாம் நிலை நகரங்களில் உள்ள நிகழ்ச்சிகளுக்கான சந்தைகளில் இதுவரை பயன்படுத்தப்படாத சாத்தியங்கள் மற்றும் உள்ளூர் அடிப்படையிலான  நிகழ்வுகளுக்கு  முக்கியத்துவம் கொடுத்து அந்த சந்தையை ஈர்த்தோம். இது ஒரு புதிய வணிக வாய்ப்பு மற்றும் உள்ளூர்வாய்ப்புகளை  சரியான முறையில் ஈர்த்து நல்ல சந்தை வாய்ப்பையும், அதன் வழியே கிடைத்த நம்பிக்கையையும்  கவனித்த முதலீட்டாளர்கள் எங்கள் தயாரிப்பை இன்னமும்  விரிவாக்கக முதலீடுகளை செய்தனர்.”

“M2P, IppoPay, bitsCrunch போன்ற நிறுவனங்களின் தலைவர்களை எவ்வாறு ஈர்த்தீர்கள்? நடிகை நயன்தாராவின் முதலீடு எப்படி நிகழ்ந்தது?”

யாழினி சண்முகம்: “எங்கள் அணுகுமுறை எப்போதும் வியாபார சார்ந்ததாக இல்லாமல், உறவு சார்ந்ததாக இருந்தது. இந்த நிறுவனங்களின் நிறுவனர்கள் மற்றும் தொழில்நுட்ப தலைவர்களுடன் நேரடி உரையாடல்களில், எங்கள் தொழில்நுட்ப வலிமை, சந்தை தேவைகளை புரிந்துகொள்ளும் எங்களின் ஆழமான பார்வை, செயல்பாட்டில் உள்ள உறுதியான அணுகுமுறை ஆகியவை அவர்களை கவர்ந்தன.

அவர்கள் அனைவரும் ஆரம்ப கட்டத்தில் செயல்பாடு, விரிவாக்கம், தயாரிப்பு – சந்தை பொருத்தம் ஆகியவற்றை மதிப்பீடு செய்யும் ஆழமான புரிதல் கொண்டவர்கள். Ticket 9-ன் வளர்ச்சி விவரங்கள், மீண்டும் மீண்டும் வரும் ஏற்பாட்டாளர்கள், குறைந்த செலவின்  வாடிக்கையாளர் ஈர்த்தல்,  நம்பிக்கையின் அடிப்படையில் பரிந்துரைத்தலால் ஏற்பட்ட பரவல் ஆகியவை அவர்கள் நேரடியாக பார்த்தபோது அவர்களுக்கு தெளிவான நம்பிக்கை ஏற்பட்டது.

முதலீட்டிற்காக நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் அவர்களின் நிறுவனத்தை அணுகியபோது, Ticket 9-ன் பொழுதுபோக்கு மற்றும் தொழில்நுட்ப வாய்ப்பு, தென்னிந்திய சந்தையில் கலை நிகழ்வுகளுக்கான  பிரமாண்ட வாய்ப்பை பார்த்தார்கள். எங்களின்  மென்பொருளை நல்ல வாய்ப்புள்ள களமாக பார்த்தனர் , அதன் சிறு சிறு சந்திப்புகள், விவாதங்களுக்குப் பிறகு முதலீடாக பெற்றோம்.

மேலும், நடிகை நயன்தாரா இன்று Ticket 9-ன் பிராண்ட் தூதராகவும் செயல்படுகிறார். இது எங்கள் பிராண்டுக்கு பெரிய நம்பிக்கையின் முத்திரை மட்டுமல்ல, இந்தியாவின் பொழுதுபோக்கு சூழலியலில் Ticket 9-ஐ முன்னிலைப்படுத்தும் சக்தியாகவும் அமைந்துள்ளது.”

“BookMyShow, Paytm Insider போன்ற பெரிய போட்டியாளர்களிடமிருந்து எவ்வாறு வேறுபடுகிறீர்கள்?”

சந்தோஷ்:  “பெரிய போட்டியாளர்களை நாங்கள் தடையாக அல்ல, வாய்ப்பாகவே கண்டோம். அவர்கள் கவனம் செலுத்தும் பொது சந்தை இடைவெளிகளுக்கு வெளியே, பல முக்கியமான சிறப்பு நிகழ்வுகள், கல்லூரி மற்றும் சமூக விழாக்கள், நிகழ்வு நடத்துநரின் சிரமங்கள் குறித்து நாங்கள் மிகக் கவனம் செலுத்தியுள்ளோம்.

Ticket 9-ன் முக்கிய வலிமை அதன் உள்ளூர் முதல், படைப்பாளிகளுடன் நட்பான அணுகுமுறை. பெரிய நகரங்களை மட்டுமல்ல, இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களுக்கும் தொழில்நுட்பம் மற்றும் வெளிப்பாட்டை அளிக்கிறோம். இது நிகழ்வு தொழில்நுட்ப உலகில் மிகக் குறைவானவர்கள் செய்யும் முயற்சி. மேலும், Ticket 9 ஒரு டிக்கெட்டிங் தளம் மட்டுமல்ல. இது பிராண்ட் இணைப்பு மற்றும் ஸ்பான்சர்ஷிப் ஒத்துழைப்புகளை உருவாக்கும் முழுமையான சூழலியல் தொகுப்பு. புதிய மற்றும் நிலையான பிராண்டுகள் தங்கள் சலுகைகள், கூப்பன்களை எங்கள் தளத்தில் பட்டியலிட்டு புதிய பயனர் தளத்தை அடையலாம்.

முக்கியமாக, செயற்கை நுண்ணறிவு சக்தியுடன் கூடிய எங்களது மென்பொருள் வாடிக்கையாளர்களுக்கு ஏற்றவாறு செயல்பட்டு அவரை நிகழ்ச்சிக்கு சீட்டுகளை பதிய வைக்கும் வகையில் ஆர்வத்தைத் தூண்டும். அதோடு அந்த பிராண்டின் கூப்பன்கள் அந்த பிராண்டு எதிர்பார்க்கும் பார்வையாளர்களுக்கு மட்டுமே காட்டப்படும். இது துல்லியமான வாடிக்கையாளர்களை நோக்கி சந்தைப்படுத்தலாகவும், முதலீட்டு மீதான வருவாயை அதிகரிக்கும் வழியாகவும் அமைகிறது.”

“இந்தியாவிலும் குறிப்பாக தமிழ்நாட்டிலும் விரிவாக்கத்திற்கான உங்கள் உத்திகள் யாவை?”

யாழினி சண்முகம்: “முதல் நிலை நகரங்களில், பெரிய அளவிலான ஏற்பாட்டாளர்களை குறிவைத்து தொழில்நுட்ப மற்றும் சேவை மேன்மையை வலியுறுத்துகிறோம். இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில், நம்பிக்கை ஈட்டுதல் மற்றும் படைப்பாளிகளோடு இணைந்து செயல்படுத்துதல் வழிமுறையை தேர்வு செய்துள்ளோம்.

கல்லூரி இணைப்பு மூலம் மாணவர்களை ஏற்பாட்டாளர்களாக உருவாக்குகிறோம். உள்ளூர் நிகழ்வு ஏற்பாட்டாளர்களுக்கு டிக்கெட்டிங் மட்டுமல்ல, பிராண்டிங், சந்தைப்படுத்தல் ஆதரவு என முழுமையான சூழலியல் தொகுப்பை வழங்குகிறோம்.

பரிந்துரை திட்டங்கள், நகர அளவிலான தூதர்கள், பிராந்திய கூட்டாண்மைகள் – இவையெல்லாம் எங்கள் சந்தை நுழைவை இயல்பாகவே உள்ளூரமைக்க உதவுகின்றன.”

தொழில் தொடங்கிய பின் சந்தித்த சவால்களையும் அவற்றை எதிர்கொண்ட விதத்தையும் விளக்குங்கள்?

யாழினி சண்முகம்: “Ticket 9 தொடங்கிய பின் பல்வேறு சவால்கள் எங்களை எதிர்கொண்டன.

முதலில், புதிய தளமாக, எதிர்பார்ப்பு இல்லாத சந்தையில் நம்பிக்கை உருவாக்குவது பெரிய சவாலாக இருந்தது. நிலையான தளங்களை விட்டுவிட்டு ஏன் Ticket 9 என்பதை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் நிரூபிக்க வேண்டியிருந்தது. இதற்காக, நிறைய ஆய்வுகள், அதோடு ஏற்பாட்டளர்களுக்கு தனிப்பயனாக்கப்பட்ட நுட்பங்களை வழங்கினோம், இதனால்  ஆரம்பத்தில் ஏற்றுக்கொள்பவர்களுக்கு விரைவான தீர்வு  அவர்களோடு களத்தில் நெருக்கமான பணியாற்றுதல் ஆகியவற்றால் அவர்களை ஈர்த்தோம்.

இரண்டாவது சவால், இலவச நிகழ்வுகளுக்கு தளத்தில் ஆதரவு கொடுக்கும்போது, அதன் பின்விளைவுகளை (தளத்தின் சர்வர்களின் பளுஅதிகரிப்பு, அதனால் ஏற்படும் செலவினங்கள், ஸ்பாம் போன்ற சிக்கல்கள் ஆகியவை கடினமாக இருந்தது. இதற்கு நிகழ்வு வகை அடிப்படையில் புத்திசாலித்தனமான கட்டுப்பாடு, ஒப்புதல் அடிப்படையிலான பட்டியல்கள், பயன்பாடு அடிப்படையிலான கட்டமைப்பு செலவு மாதிரிகளை செயல்படுத்தினோம்.

ஆரம்பத்தில் அடிப்படை MVP இருந்தது. ஆனால் தேவை அதிகரிக்க, நாங்கள் விரைவாக செயல்பட்டு, மைய உள்கட்டமைப்பை சிறு சேவைகள் கட்டமைப்புக்கே மாற்றினோம்.

மூன்றாவது – மனித வளம். சரியான அணியை கட்டியெழுப்புவது சவாலாக இருந்தது. ஆனால் எங்கள் கலாச்சாரம் மற்றும் நோக்கத்தை சரியாக தெரிவித்த பிறகு, ஆர்வம் உந்தப்பட்ட சக ஊழியர்கள் தானாகவே சேர்ந்தனர்.

ஒட்டுமொத்தமாக, சவால்கள் வந்தபோதும், அதை வளர்ச்சிக்கான தாவல் பலகையாக மாற்றிக்கொண்டே வந்தோம் – அதுவே Ticket  9-ன் மரபணு. அதனால்தான் இன்று Ticket 9 தளத்தின் மூலம் 2000+ நிகழ்ச்சிகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளன, 10 லட்சத்திற்கும் மேல் நிகழ்ச்சிகளுக்கான சீட்டுப் பதிவுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன,

பிராண்டுகள், ஸ்பான்சர்கள் மற்றும் ஆர்டிஸ்ட்-ஆடியன்ஸ் ஆகியவற்றை இணைக்கும் ஒரு வலிமையான வணிக மாடலை உருவாக்கி AI அடிப்படையில் சரியான வாடிக்கையாளர்களுக்கு நிகழ்ச்சிகளை காட்டி நிகழ்ச்சிகளுக்கு பதிவு செய்ய ஊக்கப்படுத்துகின்றோம்.

பல நிறுவனங்களுடன் இணைந்து நி்கழ்ச்சிகளை பதிவுச்செய்யும் தொழில்நுட்பவழிச் சூழலை Ticket 9 உருவாக்கி வருகிறது.”

“சர்வதேச விரிவாக்கம், குறிப்பாக UAE மற்றும் சிங்கப்பூரில், உங்கள் எதிர்கால திட்டம் என்ன?”

யாழினி சண்முகம்: “உலகம் முழுவதும் இந்தியர்கள், குறிப்பாக தமிழர்கள், பெரும் எண்ணிக்கையில் வாழ்ந்து வருகின்றனர். அவர்களின் வேர்கள் மற்றும் சொந்த கலாச்சாரத்தின் மீதான அன்பு நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இதன் வெளிப்பாடாக, பல சொந்த கலாச்சார நிகழ்வுகள் – நகைச்சுவை நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள், பிராந்திய திரைப்பட திரையிடல்கள் போன்றவை வெளிநாட்டு நகரங்களில் ஒரு போக்காக வளர்ந்து வருகிறது.

இந்த சந்தை வளர்ச்சியின் மையத்தில், Ticket 9 போன்ற உலகளவில் விரிவாக்கக் கூடிய தளம் மிகவும் அவசியம். பொதுவான தீர்வுகள் வழங்கும் பல தளங்களைவிட, Ticket 9 அதிக உள்ளூர் அனுபவத்தை சர்வதேச பார்வையாளர்களுக்கு இணைக்கும் ஒரு முயற்சியாக செயல்படுகிறது.

நாங்கள் உருவாக்கும் எதிர்கால வழித்திட்டத்தில், பலநாட்டு நாணய வசதி செலுத்தி பதிவு செய்தல்,  அந்தந்த நாட்டு உள்ளூர் மொழி இடைமுகங்கள், உள்ளூர் வரி கையாளுதல் (வேட், ஜிஎஸ்டி போன்றவை) போன்ற அம்சங்களுடன், Ticket 9 ஒரு கலாச்சார-தொழில்நுட்ப உள்கட்டமைப்பாக உருவாகும். இது நிகழ்வு ஏற்பாட்டாளர்கள், கலைஞர்கள், ஸ்பான்சர்கள் மற்றும் புலம்பெயர் பார்வையாளர்களுக்கிடையே ஒரு  பாலமாக இருக்கும்.

முக்கியமாக, Ticket 9 ஒரு உள்ளூர் தமிழ் கலைஞரின் உலகளாவிய மேடையில் நிகழ்ச்சிக்கு தடையற்ற டிக்கெட்டிங் மற்றும் சமூக ஈடுபாட்டை வழங்கும் ஒரே இடத்தில் தீர்வாக திகழ்கிறது. இது சாதாரண டிக்கெட்டிங் தளம் அல்ல – இது நம் கலாச்சாரத்தை நவீன தொழில்நுட்பத்தின் மூலம் உலகம் முழுவதும் கொண்டுசெல்லும் ஒரு இயக்கமாக இருக்கிறது.

நாங்கள் Ticket 9-ஐ தெளிவான நோக்கத்துடன் இந்த வழியில் வடிவமைத்து வருகிறோம் – மிக விரைவில் உலகளாவிய சந்தைகளில் பெரிய அளவில் விரிந்து, பண்பாட்டு இணைப்புகளையும் நிகழ்வு பரவலையும் மேம்படுத்தும் ஒரு சக்திவாய்ந்த தளமாக வளர எங்களை தயார்படுத்தி வருகிறோம்.”

சாகசம் தொடரும்..!

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *