
சென்னை: “பாஜகவோடு ஒட்டும் இல்லை. உறவும் இல்லை எனக் கூறி வந்த அதிமுக, அப்படியே யூடர்ன் அடித்து கமலாலயம் பக்கம் வண்டியைத் திருப்பியது போலத் தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்திலும் தன் நிலைப்பாட்டை மாற்றிவிட்டு இன்று வியாக்கியானம் பேசுகிறது,” என்று இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தொகுதி மறுசீரமைப்பு எப்போது நடந்தாலும் அதில் தமிழ்நாட்டின் உரிமைகள் பாதிக்கப்படக் கூடாது என்பதை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த போதே தெரிவித்தது நான்’ எனச் சொல்லியிருக்கிறார் எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி. சட்டமன்ற கூட்டம் நடந்து கொண்டிருக்கும் போது யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் சத்தமே இல்லாமல் கடந்த மார்ச் 25-ம் தேதி டெல்லியில் பழனிசாமி எதற்காகப் போய் இறங்கினார்?