• June 6, 2025
  • NewsEditor
  • 0

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்

இயல்பாகவே எனக்கும் என் கணவருக்கும் சுற்றுலா பயணங்கள் செல்வதில் மிகவும்ஆர்வம். ஒவ்வோரு பயணமும் ஒரு பிரத்யேகமான அனுபவத்தை அளிக்கும். சில வருடங்களுக்கு முன் நாங்கள் சென்ற ஐரோப்பா சுற்றுலா பயணம் நெஞ்சில் நீங்காத ஒன்று.

நாங்கள் இருவரும் சென்னையிலிருந்து கிளம்பி ‘டுஸுல்டார்ஃப்’ (Düsseldorf)என்ற இடத்திற்கு சென்றோம். என் மகள் ‘மார்ல் மிட்டே’(MarlMitte) என்ற ஊரில் மூன்றுமாதம் ஒர் பணியில் பயிற்சியாளராக சேர்ந்திருந்தாள். ஒரு வாரம் விடுப்பு எடுத்துக்கொண்டு நாங்கள் இறங்கிய ஊருக்கு வந்து சேர்ந்தாள்.

மறு நாள் நாங்கள் விமானம் மூலம் பெர்லின்(Berlin) நகரம் வந்தடைந்தோம். ஹோட்டல் அறையில் பெட்டி சாமான்கள் வைத்துவிட்டு , கை கால்முகம் கழுவிய பின்னர் நகரத்தை சுற்றி பார்க்க கிளம்பி ஹாப் ஆன் ஹாப் ஆஃப் என்ற பஸ்ஸில் ஏறினோம். நாம் விருப்பப்ட்ட இடத்தில் ஏறி இறங்கி பார்க்க வேண்டியதை பார்த்துவிட்டு அதே பஸ்ஸில். ஏறலாம். நம் தேவைக்கு ஏற்ப நாள் கணக்கில் பாஸ் எடுக்கலாம்.

முதலில் ‘பிரான்டன்பர்க் கேட்’ (Brandenburg gate)என்ற இடத்தை பார்வையிட்டோம். இதை அமைதி வாயில் என்று அழைக்கிறார்கள். நெப்போலியன் தன் போர் வெற்றிக்கு பிறகு இந்த நுழை வாயில் வழியாக நுழைந்ததாக கூறப்படுகிறது. அடுத்து ஜெர்மனியின்பார்லிமென்ட் கூடும் ‘ரைக்ஸ்டேக் ‘ (Reichstag) கட்டடம் என்பதை பார்த்தோம்.

இதைதொடர்ந்து பெர்லின் சுவர் இருந்து, பின்னர் இடிக்கபட்ட இடத்திற்கு சென்றோம்.கிழக்கு மற்றும் மேற்கு ஜெர்மனியை பிரிக்கவும் கிழக்கு பெர்லினிலிருந்து எவரும் அந்த பகுதிக்கு செல்வதை தடுக்கவும் 1961 வருடம் எழுப்பப்பட்டது.

‘செக்பாயின்ட் சார்லீ ‘ என்ற இடத்தில் ஒருபுறத்திலிருந்து மறுபுறம் அனுமதியோடு செல்ல விழைபவர்களை பரிசோதித்து, பின்னரே அவர்கள் தாண்ட முடியும்.1989 வருடம் இந்த சுவர் இடிக்கபட்டு மீண்டும் ஜெர்மனி ஒரே நாடாக இணைந்தது .இந்த இடைப்பட்ட காலத்தில் தாண்ட முயன்ற பலர் உயிரிழந்தனர்.

மதிய உணவு உண்டபின் மறுபடியும் பஸ் ஏறி சுற்றி பார்க்க தொடங்கினோம். நாங்கள்கண்ட மற்றும் ஒரு மனதை உருக்கிய சின்னம். ஹோலகாஸ்ட்’ எனப்படும் நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான யூதர்கள் இரண்டாம் உலகப்போர் சமயம் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவிடமாக எழுப்பி உள்ளனர். மனதில் துக்கம் மேலிட இறந்தவர்களுக்கு அஞ்சல் செலுத்தும் வகையில் கண்களை மூடி அமைதி காத்தோம்.

மறுநாள் காலை , ஒரு சுற்றுலா கம்பெனி மூலம் பல பார்வையாளர்கள் கொண்ட ஒரு குழு ரயிலில் சென்று ‘சக்சென் ஹாசென்’(Sachsenhausen’s) என்ற கான்சென்ட்றேஷன் கேம்ப் சென்று பார்வையிட்டோம்.

இரண்டாம் உலகப்போர் சமயம்நாஜி குழுவினர் நடத்திய கொடூரங்கள் அடங்கிய படங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. கணக்கிலடங்கா யூதர்களும் பின்னர் போர் கைதிகளும் வதைக்கப்பட்ட இடம் .

அடிப்படை வசதிகள் இல்லாமல், கழிப்பறைக,ள் குளியல் அறைகள், படுக்கை வசதி எல்லாமே கனவிலும் நினைக்க முடியாத அளவிற்கு அவலநிலை. அங்கிருந்த படங்களில் ஒவ்வொருவரும் எலும்பும் தோலுமாய் காட்சியளித்தனர். அந்த கேம்ப் உள்ளே சுற்றி பார்க்கையில் அங்கே உள்ள வாயு அறையை( கேஸ் சேம்பர்) கண்டோம்.

பினைக்கைதிகள் மற்றும் யூதர்களை கொல்ல முடிவு செய்த பின் அனைவரும் அணிவகுத்து அவ்வழியே செல்ல வேண்டும். அவர்கள் விடுதலையாகி செல்கிறோம் என்ற எண்ணத்தை கொடுத்து அந்த அறையில் விஷ வாயுவை செலுத்தி படுகொலை செய்தனர். இந்த நிகழ்வு அனைத்தும் படங்களாக பார்வைக்கு வைக்கபட்டிருந்தது. அந்த இடத்தைவிட்டு மிகவும் கனத்த இதயத்துடனும் வருத்தத்துடனும் கிளம்பி தங்கும் ஹோட்டலை வந்தடைந்தோம்.

அடுத்த நாள் கோல்ன்( Kolhn) என்ற இடத்திற்கு சென்றோம்.

இங்கே கோல்ன் கதீட்ரல் மிகவும்பிரசித்தி பெற்றது UNESCO இதை பாரம்பரிய களமாக அறிவித்திருக்கிறது. அதன் பிரம்மாண்ட வடிவமைப்பு கண்கொள்ளா காட்சி.

உள்ளே அழகிய வேலைப்பாடுகள் உயர்ந்த கூரை . தேவலோகம் போல் இருந்தது. மேலே ஏறிசெல்வதற்கு குறுகிய படிக்கட்டுகள் அமைந்த வழியாக ஏறத் தொடங்கினோம். சற்றேஇருட்டு. மெலிதாக எரியும் விளக்கு ஒளி.

இதய நோய் அல்லது anxiety இருப்பவர்கள் ஏறுவதை தவிர்க்குமாறு அறிவுறத்தப்பட்டது. எங்களுக்கு எதிர்பார்ப்பு, ஆசை. 50 வயதிற்கு மேல். குறிப்படும் படி உடல் உபாதைகள் இல்லை. ஆகையால் தொடர்ந்து ஏறினோம். சில இடங்களில் அகலம் குறைவானபடிகள். எதிரில் வருவோர்க்கு வழி விட சுவர் அல்லது படியின் விளிம்பில் ஒதுங்கியவாறு சென்றோம். மேலிருந்து பார்க்கும் போது கோலொன் நகரம் , ரைன் ஆறு அழகாக இருந்தது.

மறுநாள் பெல்ஜியம் நாட்டின் தலை நகரான பிரஸல்ஸ் ( Brussels) சென்றோம். முதலில் கிரான்ட் ப்ளேஸ்( Grand Place) என்ற இடத்தை பார்த்தோம். வெகு காலமாக மார்க்கட் இடமாக இருந்து வந்தது.

அங்கே உள்ள பிரஸ்ஸல்ஸ் நகர ஹால் மிகவும் பிரசித்திபெற்ற சுற்றுலா இடமாகும். 600 ஆண்டுகள் முன் எழுப்பப்பட்டது. அதன் பிறகு பலமுறை புதிப்பிக்கபட்டது. UNESCO இந்த இடத்தை உலக பாரம்பரிய களமாகஅறிவித்தது.

அடுத்து இசை கருவிகள் அருங்கண்காட்சியகம் உள்ளே நுழைந்தோம்.

ஆயிரக்கணக்காண பலவித இசை கருவிகள் உலகின் பல்வேறு இடங்களில் இருந்து தருவிக்கபட்டிருந்தது. ஆடியோ மூலம் ஒவ்வொரு இசைகருவியினை பற்றி தெரிந்து கொண்டோம்.

அன்று இரவு அந்த ஊரிலேயே தங்கிவிட்டு மறு நாள் நெதர்லான்ட்ஸ், மாஸ்டிரிட்ச் (Maastricht) என்ற ஊருக்கு ரயிலில் சென்றோம். என் மகளின் பள்ளி தோழன் அந்த ஊரில் மேல் படிப்பு சேர்ந்திருந்தான்.

அருகில் உள்ள ‘வாக்ன்பர்க் ‘(Valkenburg) என்ற ஊருக்கு சென்றோம். அங்கே ஒரு இடிந்த நிலையில் ஒரு கோட்டை.. 11 ம் நூற்றாண்டு காலத்தில் கட்டப்பட்டது. கீழே ஒரு சுரங்கப்பாதை. வெல்வெட் கேவ் என்று அழைக்கபடுகிறது. நுழைவாயில் ஒரு சிறியகதவால் பூட்டப்பட்டிருந்தது. இந்தச சுரங்கப்பாதை அரசர்கள் காலத்ததில் ரகசிய வழியாக இருந்திருக்கிறது. போர் காலங்களில் மறைவிடமாகவும் தேவையான சாமான்கள் எடுத்து செல்ல உபயோகித்துள்ளனர்.

இரண்டாம் உலகப் போர் சமயம் அமெரிக்க போர் வீரர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் இங்கே மறைந்து தங்கியுள்ளனர். 18 ம் நூற்றாண்டு ஒரு பாதிரியார் மூன்று வருடம் உள்ளே தங்கி ‘ சேப்பல் ‘ உருவாக்கியுள்ளார்.

டிக்கட் வாங்கி ஒரு உதவியாளருடன் அந்த சுரங்கப்பாதையுள் சென்றோம். கும்மிருட்டு. தாங்க முடியாத குளிர். கையில் ஒரு டார்ச் விளக்குடன் அவர் முன்னே நடந்தார். நாங்கள் பின் தொடர்ந்தோம். அனைவரும் சேர்ந்து இருக்கும்படியும் வழிதவறி போகாமல் இருப்பதற்கு இது அவசியம் என்று வலியுறுத்தினார். உள்ளே ஆங்காங்கே சுவர் ஓவியங்கள், கல்வெட்டுகள் .

விளக்கை அணைத்தால் எப்படி இருக்கும் என்று காட்ட எங்கள் அனைவரையும் இடத்தைவிட்டு நகராமல் சேரந்து இருக்கும்படி கண்டிப்பான உத்தரவிட்டு பின்னர் டார்ச் விளக்கை எடுத்துக் கொண்டு நகர்ந்து சென்றார். ஒரே திகில். பக்கத்தில் எவருமே இல்லாதது போல் உணர்வு. அச்சத்தின் உச்சம்! அந்த. ஓரு நிமிடம் ஒரு யுகம் போல்தோன்றியது. மெதுவாக உதவியாளர் விளக்கு வெளிச்சத்துடன் வந்ததும் அனைவருக்கும் உயிர் வந்தது.

அந்த வெல்வெட் குகையைவிட்டு வெளியே வந்தோம். அந்த இடிந்த கோட்டையை சுற்றி பார்த்துவிட்டு நாங்கள் தங்கியிருந்த ஊருக்கு திரும்பினோம்.

இங்கே மற்றுமொரு கேட்டு அறிந்துகொண்ட விவரத்தை சொல்ல விரும்புகிறேன்.1993 வருடம் இரண்டு சிறுவர்கள் விளையாட்டுதனமாய் குகையை பாரக்க சென்றனர். அவர்கள் எடுத்து சென்ற டார்ச் விளக்கு உடைந்து போனதால் நுழைவாயிலின் சிறிது தூரத்திலேயே இருவரும் பிரிந்ததாகவும் மூச்சு திணறியதாகவும் காப்பாற்ற இயலாமல்போனது என்று

உதவியாளர் கூறினார். அதன் பிறகே அந்த வாயில் பூட்டப்பட்டது.

சென்னை திரும்பும் நாள் வந்தது. என் மகள் எங்களை ஏர்போர்ட் வந்து வழியனுப்பிவிட்டுஅவள் பணி புரிந்துவந்த ஊருக்கு திரும்ப சென்றாள். நாங்கள் சென்னை வந்துசேர்ந்தோம்.

இந்த ஐரோப்பா சுற்றுபயணம் பலவிதமான உணர்வுகள் மற்றும் அனுபவங்களைஅளித்தது. ஒரு புறம் பழங்கால பாரம்பரிய மிக்க இடங்களை பார்த்த மகிழ்ச்சி. மறுபுறம் மனதை உலுக்கும் , நெஞ்சை உருக்கும் நிகழ்வுகள் நடந்த இடங்களை பார்த்த சோகம்!

My Vikatan-க்கு உங்களது `சுற்றுலா’ கட்டுரை

டூர்

இனி வாசகர்கள் விகடன் அறிவிக்கும் மாதாந்திர தலைப்பை மையப்படுத்தி கட்டுரைகள் அனுப்பலாம்.

இந்த மாதத்திற்கான தலைப்பு – `சுற்றுலா’. சுற்றுலா என்கிற தலைப்பில் My Vikatanக்கு உங்களது கட்டுரை படைப்புகளை அனுப்பலாம். நீங்க சுற்றுலா போன அனுபவமாக இருக்கலாம், பார்க்க வேண்டிய தலங்களாக இருக்கலாம், சுற்றுலா போகும் போது செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்த தகவல்களாகவும் இருக்கலாம். ஆனால், உங்களின் சொந்த படைப்பாக, இதுவரை எந்த தளத்திலும் வெளிவராத படைப்பாக இருக்க வேண்டும், புகைப்படங்களுடன் அனுப்பவேண்டும். தேர்வு செய்யப்படும் கட்டுரைகள் அனைத்தும் பிரசுரம் ஆகும்.

வாசகர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில், இந்த மாதம் அனுப்பப்படும் பயணக் கட்டுரைகளில் சிறந்த கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது.   

பரிசுத்தொகை விவரம்:

  • முதல் பரிசு : ரூ. 2,500 (2 வெற்றியாளர்கள்)

  • இரண்டாம் பரிசு : ரூ. 1000 (5 வெற்றியாளர்கள்)

  • நினைவுப் பரிசு: ₹500 (10 வெற்றியாளர்கள்)

நினைவில் கொள்க: 

  • நீங்க கட்டுரையை அனுப்ப வேண்டிய கடைசி நாள் ஜூன் 20, 2025

  • ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கட்டுரைகளை அனுப்பலாம்.

  • உங்கள் படைப்புகளை: my@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்

  • விகடனுக்கு என்று பிரத்யேகமாக அனுப்பப்படும் கட்டுரைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும்

  • உங்கள் படைப்பை திருத்தவோ, பிரசுரிக்கவோ, நிராகரிக்கவோ முழு உரிமையும் விகடனுக்கு இருக்கிறது. 

  • கட்டுரையின் தரத்தின்  அடிப்படையில் வெற்றியாளர்கள் விகடன் நடுவர் குழுவால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *