
ஸ்ரீநகர்: மனிதநேயத்தின் மீதும், காஷ்மீர் பெருமிதத்தின் மீதும் பாகிஸ்தானால் நடத்தப்பட்ட தாக்குதலே பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் என பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார். மேலும், “பஹல்காம் தாக்குதலால் ஜம்மு காஷ்மீரின் வளர்ச்சி பாதிக்கப்படாது” என்று அவர் உறுதி அளித்தார்.
ஜம்மு காஷ்மீரில் செனாப் ஆற்றின் குறுக்கே 1,315 மீட்டர் நீளத்துக்கு அமைக்கப்பட்டுள்ள உலகின் மிக உயரமான ரயில்வே இரும்பு வளைவுப் பாலம், செனாப் நதியின் கிளை நதியான ஆஞ்சி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள நாட்டின் முதல் கேபிள் ரயில் பாலம் ஆகியவற்றை திறந்து வைத்த பிரதமர் மோடி, கத்ரா பகுதியில் ரூ.46,000 கோடிக்கு மேல் மதிப்புள்ள வளர்ச்சித் திட்டங்களுக்கான அடிக்கல்லை நாட்டினார்.