• June 6, 2025
  • NewsEditor
  • 0

இந்திய அணிக்கு உலகக் கோப்பை வென்று கொடுத்த மூன்று முக்கிய கேப்டன்களில் ஒருவர் ரோஹித் சர்மா.

தனது தலைமையில் இந்திய அணியை 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், 2023 ஒருநாள் உலகக் கோப்பை, 2024 டி20 உலகக் கோப்பை, 2025 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டிகளுக்கு அழைத்துச் சென்ற ரோஹித், 17 வருடங்களுக்குப் பிறகு டி20 உலகக் கோப்பையையும், 12 வருடங்களுக்குப் பிறகு சாம்பியன்ஸ் டிராபியையும் இந்தியாவுக்கு வென்றுகொடுத்தார்.

ரோஹித் மற்றும் இந்திய வீரர்கள்

இருப்பினும், நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கெதிரான கடைசி இரண்டு டெஸ்ட் தொடர்களில் இந்தியா மோசமாகத் தோல்வியடைந்ததாலும், அதனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியாமல் போனதாலும் எழுந்த கடும் விமர்சனங்களால், ஐ.பி.எல்லின்போதே டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்தார்.

ஏற்கெனவே சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றுவிட்டதால் இனி ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடவிருக்கிறார். இந்த நிலையில், தனது தந்தைக்கு டெஸ்ட் கிரிக்கெட்தான் பிடிக்குமென்றும், தான் அதிலிருந்து ஓய்வுபெற்றது அவருக்கு அது ஏமாற்றமளித்ததாகவும் ரோஹித் கூறியிருக்கிறார்.

செதேஷ்வர் புஜாராவின் மனைவி பூஜா புஜாரா எழுதிய, ‘தி டைரி ஆஃப் எ கிரிக்கெட்டர்ஸ் வைஃப்’ புத்தக வெளியீட்டு விழாவில் நேற்று பேசிய ரோஹித், “என் அப்பா ஒரு போக்குவரத்து நிறுவனத்தில் வேலை செய்தார். எங்களின் வாழ்க்கைக்காக நிறைய தியாகங்கள் செய்தார்.

அவர் எப்போதும் டெஸ்ட் கிரிக்கெட்டின் ரசிகர். அவருக்கு இந்த மாடர்ன் டே கிரிக்கெட் பிடிக்காது.

ரோஹித்
ரோஹித்

எனக்கு இன்னும் நியாபகமிருக்கிறது, ஒருநாள் போட்டியில் நான் 264 ரன்கள் அடித்த போது, ஓகே நன்றாக விளையாடினாய் என்றுதான் அவர் இருந்தார். அதைத்தாண்டி அவரிடம் எந்த உற்சாகமும் இல்லை.

ஆனால், டெஸ்ட் போட்டியில் 30 அல்லது 40 அல்லது 50 ரன்கள் அடித்தால் விரிவாகப் பேசுவார். அப்படித்தான் கிரிக்கெட்டை அவர் நேசித்தார்.

முதலில் நீங்கள் பள்ளியில் கிரிக்கெட் விளையாட வேண்டும். பிறகு 19 வயத்துக்குட்பட்டோர் போட்டி, ரஞ்சி டிராபி, துலீப் டிராபி, இரானி டிராபி, இந்தியா ஏ அணியில் விளையாட வேண்டும். இவையனைத்தையும் நான் செய்திருக்கிறேன்.

ரோஹித் - புஜாரா
ரோஹித் – புஜாரா

இதன் மூலம், நான் இந்திய அணியில் இடம்பிடித்துள்ளேன். என்னுடைய இந்தப் பயணத்தை அவர் பார்த்திருக்கிறார்.

சிவப்பு பந்தில் நான் நிறைய கிரிக்கெட் விளையாடுவதை என் அப்பா பார்த்திருக்கிறார். அதனால், டெஸ்ட் கிரிக்கெட்டில் நிறைய ஊக்கப்படுத்துவார்

ஆனால், அதிலிருந்து நான் ஓய்வு பெறுவதாக அறிவித்தபோது அவர் கொஞ்சம் ஏமாற்றமடைந்தார்.

அதே நேரத்தில் மகிழ்ச்சியாகவும் இருந்தார். இன்று நான் இந்த இடத்தில் நிற்பதற்கு மிகப்பெரிய பங்காற்றியிருக்கிறார். அவர் இல்லாமல் இது ஒருபோதும் சாத்தியமில்லை.” என்று கூறினார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *