• June 6, 2025
  • NewsEditor
  • 0

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தாலுகா அருகிலுள்ள பி. ஆர். பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (55). கூலித் தொழிலாளரான இவர், குடும்பத் தகராறில் மதுவில் விஷம் கலந்து குடித்தார்.

அதனால் ராஜேந்திரனை அவரின் குடும்பத்தினர் திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ராஜேந்திரன், திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அங்குச் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதையடுத்து ராஜேந்திரன் சடலம், பிரேதப் பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனை பிணவறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ராஜேந்திரன் உயிரிழந்ததையடுத்து அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்கான ஏற்பாடுகளை குடும்பத்தினர் செய்துவந்தனர்.

பிரேதப் பரிசோதனை செய்து ராஜேந்திரனின் சடலம் அவரின் மகன் பாரதிதாசனிடம் கையெழுத்து வாங்கி ஒப்படைக்கப்பட்டது.

பிணவறை

சோகத்துடன் இருந்த ராஜேந்திரனின் குடும்பத்தினர் சடலத்தைப் பார்த்தபோது இது ராஜேந்திரன் இல்லை எனச் சத்தம் போடத் தொடங்கினர்.

உடனே ராஜேந்திரனின் மகன் பாரதிதாசன், “இது என்னோட அப்பா இல்லை. அப்பா எங்கே?” எனப் பிணவறையிலிருந்த ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்யத் தொடங்கினார்.

நிலைமை உணர்ந்த பிணவறையிலிருந்த ஊழியர்கள் உடனடியாக மருத்துவமனை நிர்வாகத்துக்குத் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து ராஜேந்திரனின் சடலம் என ஒப்படைக்கப்பட்டவரின் சடலத்தை மீண்டும் பிணவறைக்கு எடுத்துச் சென்ற ஊழியர்கள், ராஜேந்திரனின் சடலத்தை அங்குத் தேடினார். ஆனால் அங்கு இல்லை.

அதனால் பதற்றம் அதிகரித்தது. இதையடுத்து மருத்துவமனை ஊழியர்கள், அதிகாரிகள் ஒன்று சேர்ந்து ராஜேந்திரனின் குடும்பத்தினரிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தியதோடு அவரின் சடலத்தைத் தேடத் தொடங்கினர். அப்போதுதான் ராஜேந்திரனின் சடலத்தைத் தவறுதலாகப் பீகாருக்கு அனுப்பிய விவரம் தெரியவந்தது.

ராஜேந்திரனின் வீடு
ராஜேந்திரனின் வீடு

இதையடுத்து பீகாருக்கு ஆம்புலன்ஸில் கொண்டு செல்லப்பட்ட ராஜேந்திரனின் சடலத்தைத் திரும்பக் கொண்டு வரும்படி மருத்துவமனையிலிருந்து போன் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து ராஜேந்திரனின் சடலம் மீண்டும் திருவள்ளூர் அரசு மருத்துவமனை பிணவறைக்குக் கொண்டு வரப்பட்டு, அவரின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இருப்பினும் மருத்துவமனையில் அலட்சியப் போக்கு காரணமாக இந்தத் தவறு நடந்ததையடுத்து சம்பந்தப்பட்ட மருத்துவர் கிருஷ்ணா ஸ்ரீயை திருவண்ணாமலைக்கு இடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

சடலம் மாறியது எப்படி என மருத்துவமனை வட்டாரத்தில் விசாரித்தோம்.

“பீகார் பாட்னாவைச் சேர்ந்த மனோஜ் (55) என்ற தொழிலாளி வெங்கல் காவல் நிலைய பகுதிக்குட்பட்ட தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு ஹாட் அட்டாக் ஏற்பட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

திருத்தணியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ராஜேந்திரன் உயிரிழந்த அன்று மனோஜும் இறந்தார். இதையடுத்து இருவரின் சடலங்களும் அடுத்தடுத்து திருவள்ளூர் அரசு மருத்துவமனை பிணவறைக்குக் கொண்டு வரப்பட்டிருக்கின்றன.

இந்தச் சூழலில் பீகாரைச் சேர்ந்த மனோஜின் சடலத்தை அவசர அவசரமாகச் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. அதற்காக வெங்கல் காவல் நிலையத்திலிருந்து நடைமுறைகளை வேகமாக முடித்த மனோஜ் தரப்பினர், அதைப் பிணவறையில் உள்ள ஊழியர்களிடம் கொடுத்திருக்கிறார்கள்.

அப்போது மனோஜ் சடலத்துக்குப் பதிலாக ராஜேந்திரனின் சடலத்தைப் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது. பீகார் வரை கொண்டு செல்லப்படுவதால் ராஜேந்திரனின் சடலம் முழுவதுமாக பேக்கிங் செய்து ஆம்புலன்ஸில் ஏற்றி அனுப்பி வைத்திருக்கிறார்கள்.

மனோஜ் சடலத்துக்குப் பதிலாக ராஜேந்திரனின் சடலத்தை வாங்கியவர்களும் அதைக் கவனிக்கவில்லை. திருவள்ளூரிலிருந்து புறப்பட்ட ஆம்புலன்ஸ் ஆந்திராவைக் கடந்து சென்று கொண்டிருந்தது.

பிணவறை
பிணவறை

இந்தச் சூழலில் மனோஜின் சடலத்தைப் பிரேதப் பரிசோதனை செய்ததோடு அதை ராஜேந்திரன் என அவரின் குடும்பத்தினரிடம் ஒப்படைத்தபோதுதான் தவறு கண்டுபிடிக்கப்பட்டது. பொதுவாகப் பிணவறைக்குள் ஒவ்வொரு சடலங்களுக்கும் நம்பர்தான் கொடுக்கப்பட்டு ப்ரீசர் பாக்ஸில் வைக்கப்பட்டிருக்கும்.

ராஜேந்திரன், மனோஜ் சடலங்களின் நம்பர்களை மாற்றி எடுத்து பிரேதப் பரிசோதனை செய்து தவறுதலாக ஒப்படைக்கப்பட்டதே சடலங்கள் மாறியதற்குக் காரணமாகும்.

இதுதொடர்பாக விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. முதற்கட்டமாக மருத்துவரை இடமாற்றியிருக்கிறோம். அடுத்து ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர். 

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *