• June 6, 2025
  • NewsEditor
  • 0

இந்தியாவில் தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமணம் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்படவில்லை என்றாலும், அவர்கள் குடும்பமாக வாழ முடியும் எனத் தெரிவித்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.

தன்பாலின ஈர்ப்பாளரான பெண் ஒருவர், தனது 25 வயது இணையை அவரது குடும்பத்தினர் வலுக்கட்டாயமாக தடுத்து வைத்திருப்பதை எதிர்த்து தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவில் சென்னை உயர் நீதிமன்றம் இந்த கருத்தைத் தெரிவித்துள்ளது.

Lesbian Couple (Representative)

தன்பாலின ஈர்ப்பாளர்களான அந்த தம்பதிக்கு ஆதரவாக தீர்ப்பளித்த, நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் வி. லட்சுமிநாராயணன் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், “திருமணம் மட்டுமே குடும்பத்தை கட்டமைப்பதற்கான ஒரே வழி அல்ல” எனக் கூறியுள்ளது.

“நாங்கள் குறிப்பிட்ட கேட்டபோது, தடுப்புக் காவலில் உள்ள பெண் தான் ஒரு லெஸ்பியன் எனக் கூறினார். மனுதாரருடன் உறவில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.” என நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

மேலும் அந்த பெண், குடும்பத்தாரால் தாக்கப்பட்டதாகவும், அவரை ‘சாதாரணமாக’ மாற்றுவதற்கான சடங்குகளுக்கு உட்படுத்தப்பட்டதாகவும் நீதிமன்றத்தில் கூறியுள்ளார்.

குடும்பத்தினருடன் இருப்பது உயிருக்கு ஆபத்து என்றும், மனுதாரருடனே இருக்க விரும்புவதாகவும் அந்தப் பெண் கூறியுள்ளார்.

சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

மனுதாரரான பெண், காவல்துறையில் அளித்த புகாரில் தன்னை ‘நெருங்கிய நண்பர்’ என்றே கூறியுள்ளார். இது குறித்து, “தன்பாலின ஈர்பாளர்கள் இன்னமும் சமூக களங்கத்தை எதிர்கொள்வதால் ஏற்பட்ட இந்த தயக்கத்தை நீதிமன்றம் புரிந்துகொள்கிறது” என நீதிபதிகள் கூறியுள்ளனர்.

NALSA மற்றும் நவ்தேஜ் ஜோஹர் வழக்குகளில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளை மேற்கோள் காட்டிய நீதிபதிகள், அரசியலமைப்பின் பிரிவு 21ன் படி, பாலியல் நோக்குநிலை (sexual orientation) என்பது தனிப்பட்ட நபரின் கட்டுப்பாட்டில் உள்ளது மற்றும் தனிப்பட்ட நபரின் கண்ணியம் சார்ந்ததாக பாதுகாக்கப்பட்டுள்ளது என்பதைக் குறிப்பிட்டுள்ளனர்.

பிரசன்னா ஜே – எஸ் சுஷ்மா வழக்கில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷின் முந்தைய தீர்ப்பும் நீதிமன்றத்தில் மேற்கோள் காட்டப்பட்டது. அதில், LGBTQIA+ தம்பதிகளுக்கு இடையிலான குடும்ப இணைவு பத்திரம் அங்கீகரிக்கப்பட்டு, அவர்களது இணைவு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

“மனுதாரரும், தடுப்புக்காவலில் உள்ள பெண்ணும் சட்டப்பூர்வமாக ஒரு குடும்பத்தை உருவாக்க முடியும்” என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

தடுப்புக்காவலில் உள்ள பெண்ணை உடனே விடுவிக்க உத்தரவிட்டு, அவர் பிறந்த குடும்பம் அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிடுவதை நீதிமன்றம் தடுத்துள்ளது. மேலும் தேவைப்படும்போது தன்பாலின ஈர்ப்பாளர் தம்பதிக்கு பாதுகாப்பு வழங்க காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *