
திமுக தொண்டர்களை தேர்தலுக்குத் தயார்படுத்தும் மண்டலப் பொறுப்பாளர்கள் பட்டியலில் அமைச்சர் கே.என்.நேருவும் பிரதானமாக இருக்கிறார். அப்படி இருக்கையில், அவரது சொந்த மாவட்டத்திலேயே நேரு கோஷ்டி, அன்பில் மகேஸ் கோஷ்டி என இன்னமும் தாமரை இலை தண்ணீராகவே நிற்கிறார்கள் உடன்பிறப்புகள். அண்மையில் நடைபெற்ற மாநகராட்சி பள்ளி கட்டிட திறப்பு விழாவில் இது அப்பட்டமாகவே தெரிந்தது.
ஒரு காலத்தில் திருச்சி மாவட்ட திமுக என்றால் அது கே.என்.நேருவின் முகமாக மட்டுமே இருந்தது. ஒன்றுபட்ட திருச்சி மாவட்டத்துக்கே செயலாளராக இருந்த நேரு, மாவட்ட திமுக-வை தனது கண்ணசைவில் வைத்திருந்தார். அதன் பிறகு அன்பில் மகேஸ் அவருக்குப் போட்டியாக மாவட்ட திமுக-வில் தலைதூக்க ஆரம்பித்தார். இதனால் நேருவை பிடிக்காதவர்கள் எல்லாம் மகேஸ் பக்கம் அணிவகுத்தார்கள். மகேஸ் தலைமைக்கு நெருக்கமான பிள்ளையாக இருந்ததால் அவரது வளர்ச்சியை நேருவால் தடுத்து நிறுத்த முடியவில்லை. அதேசமயம் கள வீரரான நேருவையும் தலைமையால் ஒதுக்கி வைக்கவும் முடியவில்லை. இதனால் கோஷ்டி பூசல் நாளொரு மேனியாய் வளர ஆரம்பித்தது.