பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியிருக்கிறது. அன்புமணி ஆதரவாளர்களான பாமக பொருளாளர் திலகபாமா உட்பட 41 மாவட்ட நிர்வாகிகளைக் கட்சியில் இருந்து நீக்கி ராமதாஸ் உத்தரவிட்டார்.
மீண்டும் திலகபாமாவை பொருளாளர் பொறுப்பில் சேர்த்தார் அன்புமணி.
தொடர்ந்து இருவருக்கும் மோதல் போக்கு நிலவிய நிலையில் ராமதாஸின் தைலாபுரம் இல்லத்துக்கு அன்புமணி நேற்று சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.
அவர்கள் இடையே சுமுக நிலையை ஏற்படுத்தக் கட்சி மூத்த நிர்வாகிகள், குடும்பத்தினர் மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்ததாகத் தெரிகிறது.
இந்நிலையில் ராமதாஸ்- அன்புமணி இடையே சமாதானம் ஏற்படும் என்று ஜி.கே மணி தெரிவித்திருக்கிறார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இருவரும் 45 நிமிடங்கள் நேற்று பேசியிருக்கிறார்கள். மரியாதை நிமித்தமாகத்தான் ஆடிட்டர் குருமூர்த்தி சந்தித்தார். ராமதாஸ்-அன்புமணி இடையே சமாதானம் ஏற்படும். விரைவில் நல்ல செய்தி வரும்” என்று கூறியிருக்கிறார்.