
புதுடெல்லி: பெங்களூரு கூட்ட நெரிசல் சம்பவம் அரசால் உருவாக்கப்பட்ட பேரழிவு சம்பவம் என்றும், இந்தத் துயரச் சம்பவத்துக்கு மாநில முதல்வரும், துணை முதல்வரும் நேரடியாக பொறுப்பேற்க வேண்டும் என்றும் பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் ஷெஹாசத் பூனவல்லா சாடியுள்ளார்.
செய்தி நிறுவனம் ஒன்றிடம் பேசிய பூனவல்லா, “பெங்களூருவில் நாம் பார்த்தது, அரசால், மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவே. அதற்கு முதல்வரும், துணை முதல்வருமே நேரடி பொறுப்பு. அவர்களே முதன்மை குற்றவாளிகள், சம்பவத்துக்கு பொறுப்பேற்றுக் கொள்வதற்கு பதிலாக மற்றவர்கள் மீது பழி போடுவதையே நாம் பார்க்கிறோம். 24 மணி நேரத்துக்கு முன்பாக துணை முதல்வர் டி.கே.சிவகுமார், காவல்துறை அற்புதமாக வேலை செய்தது, அவர்கள் சிறப்பாக வேலை செய்திருந்தனர் என்று கூறி, அவர் கூட்டத்தின் மீது பழியைச் சுமத்துகிறார்.