
பெங்களூரு: ஐபிஎல் போட்டியில் ஆர்சிபி அணியின் வெற்றியை கொண்டாடும் வகையில் பெங்களூருவில் நடந்த விழாவில் தமிழக பெண் உட்பட 11 ரசிகர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளாமல் அவசர கதியில் விழாவை நடத்தியது ஏன் என்று கர்நாடக உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இதுதொடர்பாக கர்நாடக அரசு, பெங்களூரு காவல் ஆணையர், ஆட்சியர், ஐபிஎல், பிசிசிஐ நிர்வாகிகள் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இறுதி போட்டியில் வென்ற ஆர்சிபி (ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு) அணிக்கு பெங்களூருவில் நேற்று முன்தினம் விதானசவுதா வளாகத்திலும், சின்னசாமி கிரிக்கெட் ஸ்டேடியத்திலும் வெற்றி விழா நடைபெற்றது. சின்னசாமி ஸ்டேடியத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் தமிழகத்தின் உடுமலைப்பேட்டையை சேர்ந்த இளம்பெண் காமாட்சி உட்பட 11 ரசிகர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.