
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஆற்றல் அசோக் குமார். இவரின் மாமியார் சரஸ்வதி மொடக்குறிச்சி தொகுதி பாஜக எம்எல்ஏவாக இருக்கிறார். அசோக் குமாரும் ஆரம்பத்தில் பாஜகவில் இருந்த நிலையில், பிறகு அதிமுகவில் இணைந்தார்.
கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் ஈரோடு தொகுதி அதிமுக வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியை தழுவினார். அசோக் குமாரின் மனைவி கருணாம்பிகா, கடந்த சில நாள்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். மறுபக்கம் அசோக் அடுத்தடுத்து மோசடி வழக்குகளில் சிக்கி வருகிறார்.
மோசடி வழக்கு
கோவையில் செயல்பட்டு வரும் தி இந்தியன் பப்ளிக் ஸ்கூல் நிர்வாகத்தின் நிர்வாக இயக்குநராக அசோக் செயல்பட்டு வந்தார். அசோக் அந்தப் பள்ளியின் ஒரு பங்கு தாரராக மட்டுமே இருந்தார். அதேநேரத்தில் போலி ஆவணங்கள் மூலம் முறைகேட்டில் ஈடுபட்டு, பள்ளிக்கு நஷ்டம் ஏற்படுத்தியதாக அவர் மீது புகார் எழுந்தது.

இதையடுத்து அசோக் கடந்த மார்ச் மாதம் பள்ளியின் நிர்வாக இயக்குநர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். புதிய நிர்வாக இயக்குநராக பதவியேற்ற சிவசங்கரன் கோவை மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையில் அசோக் மீது புகார் அளித்தார்.
அந்தப் புகாரில், “பள்ளி நிர்வாக பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட பிறகும் அசோக் குமார், பள்ளிக்கு புதிதாக 45 பேருந்துகள் வாங்குவதற்கு வங்கிகளின் கடன் பெற்றுள்ளார். இதற்கு அவர் போலி ஆவணங்களை உருவாக்கியுள்ளார். மேலும் பேருந்துக்கு அதிக தொகையை செலவிட்டு பள்ளிக்கு நஷ்டம் ஏற்படுத்தியுள்ளார்.

இப்படி பல்வேறு முறைகேடுகளால் அவர் ரூ.40 கோடிக்கு கையாடல் செய்துள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று கூறியிருந்தார். இதேபோல அசோக் மீது சில புகார்கள் எழுந்துள்ளன. அதனடிப்படையில் அசோக் மீது தனித்தனியாக 4 எஃப்.ஐ.ஆர்கள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.