
புதுடெல்லி: அயோத்தி ராமர் கோயிலில் பிராண பிரதிஷ்டை பிரசாதம் எனக் கூறி 6 லட்சம் பேரிடம் மோசடி செய்யப்பட்டுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் பிராண பிரதிஷ்டை செய்த பிறகு சுவாமி பிரசாதம் கிடைக்கவில்லை என அயோத்தி காவல் நிலையங்களுக்கு புகார்கள் வரத் தொடங்கின. அந்த புகார்கள் மாநில சைபர் கிரைம் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டன. சைபர் கிரைம் பிரிவு நடத்திய விசாரணையில், போலி இணையதளம் உருவாக்கி, ராமர் கோயில் பிரசாதம் அனுப்புவதாக விளம்பரப்படுத்தப்பட்டது தெரியவந்தது.
காஜியாபாத்தை சேர்ந்த ஆசிஷ் என்பவர் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளார். ராமர் கோயில் பிரசாதம் பெற இந்தியாவில் ரூ.51 எனவும், வெளிநாட்டவர்களுக்கு 11 டாலர் எனவும் கட்டணம் நிர்ணயித்துள்ளார். அந்தவகையில், 3 கோடியே 85 லட்சம் ரூபாயை, 6 லட்சத்து 30,695 பக்தர்களிடம் ஏமாற்றி வசூல் செய்துள்ளார்.