
தாம்பரம் / திருவள்ளூர் / மதுராந்தகம்: உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தாம்பரம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய அரசுடன் தமிழக அரசு இணக்கமான போக்கை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
தாம்பரத்தை அடுத்த ராஜகீழ்பாக்கம் ஏரியில் உலக சுற்றுசூழல் தினத்தை முன்னிட்டு பாஜக சார்பில் தூய்மைப்படுத்துதல் மற்றும் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மாநில பார்வையாளர் அரவிந்த் மேனன், மாநில செயலாளர் வினோஜ்.பி.செல்வம் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட தலைவர் ரகுராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு ஏரிக்கரை பகுதியை தூய்மைப்படுத்தி, மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். பின்னர் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி உறுதிமொழி ஏற்றனர்.