
புதுடெல்லி: நாடு முழுவதும் புதிதாக 564 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 4,866 ஆக உயர்ந்துள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு இந்தியாவில் தற்போது மீண்டும் கரோனா வைரஸ் பரவி வருகிறது. இதற்கு உருமாற்றம் பெற்ற எல்எப்.7, எக்ஸ்எப்ஜி, ஜேஎன்.1 ஆகிய புதிய வைரஸ்களும் சமீபத்தில் அடையாளம் காணப்பட்ட என்பி.1.8.1 என்ற துணை திரிபும் காரணமாக உள்ளது.
இந்நிலையில் மத்திய சுகாதார அமைச்சக புள்ளிவிவரப்படி நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 564 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 4,866 ஆக உயர்ந்துள்ளது. மகாராஷ்டிராவில் 3 பேர், டெல்லி, கர்நாடகாவில் தலா இருவர் என மொத்தம் 7 பேர் உயிரிழந்தனர். இவர்களில் 6 பேர் முதியவர்கள் மற்றும் இணை நோய் கொண்டவர்கள் ஆவர்.