
பஹல்காம் தாக்குதல், அதைத் தொடர்ந்து பாகிஸ்தான் மீது இந்தியாவின் ஆப்ரேஷன் சிந்தூர் தாக்குதல் என ஏப்ரல் மாத இறுதியிலிருந்து கடந்த மாதம் வரை இந்தியா பரபரப்பாக இருந்தது.
அதே நேரம் பல்வேறு நாடுகளிலிருந்து இந்தியா – பாகிஸ்தான் உறவுகள் தொடர்பாக அச்சங்களும், கருத்து வேறுபாடுகளும் ஏற்பட்டன.
இதைச் சரி செய்யும் விதமாக இந்தியா அரசு, காங்கிரஸ் எம்.பி சசி தரூர் தலைமையில் ஒரு தூதுக்குழுவை ஏற்படுத்தி, உலக நாடுகளுக்கு விளக்கமளித்து வருகிறது.
அதன் அடிப்படையில், அந்தக் குழு தற்போது அமெரிக்காவில் இருக்கிறது. நியூயார்க்கில் உள்ள வெளியுறவு கவுன்சிலில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தப்பட்டது.
அப்போது வாஷிங்டன் போஸ்ட்டின் ஊடகவியலாளர் ஒருவர், நான் ஒரு கேள்வி கேட்கலாமா எனக் கை உயர்த்தினார்.
அப்போது சசி தரூர், “நிச்சயமாகக் கேள்வி கேளுங்கள்… ஆனால் அதற்கு முன்பு எழுந்து நின்று ஒரு ஹாய் சொல்லுங்கள்” என்றார். அவர் எழுந்ததும், “இவர் என் மகன்…” என அறிமுகப்படுத்தினார்.
அதைத் தொடர்ந்து ஊடகவியலாளர் இஷான் தரூர், “இந்தியாவின் சார்பில் பல்வேறு நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறீர்கள். இந்தியா சார்பில் விளக்கமளித்து வருகிறீர்கள்.
எந்த நாட்டின் தூதராவது, பாகிஸ்தான்தான் முதலில் தாக்குதல் நடத்தியது என்பதற்கான ஆதாரம் இருக்கிறதா என்றோ, அல்லது ஆதாரத்தைக் காண்பிக்கவோ கேட்டிருக்கிறார்களா?” எனக் கேள்வி எழுப்பினார்.

இந்தக் கேள்விக்குப் பதிலளிக்கும் விதமாக சசிதரூர், “இந்தக் கேள்வியை அனுமதித்திருக்கக் கூடாது” எனச் சிரித்துக்கொண்டே கூறிவிட்டு, “நீங்கள் இந்தக் கேள்வியை எழுப்பியதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் இஷான்… பாகிஸ்தான்தான் தாக்குதலைத் தொடங்கியது என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை.
அதனால் நாடுகளின் தூதர்கள் எங்களிடம் எந்த ஆதாரத்தையும் கேட்கவில்லை. ஆனால் ஊடகங்கள் இரண்டு அல்லது மூன்று இடங்களில் கேட்டுள்ளன. உறுதியான ஆதாரங்கள் இல்லாமல் இந்தியா தாக்குதலைச் செய்திருக்காது என்பதை மிகத் தெளிவாகக் கூறுகிறேன்” என்றார்.