
விழுப்புரம்: பாமக நிறுவனர் ராமதாஸ் – தலைவர் அன்புமணி இடையே மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், ராமதாஸின் தைலாபுரம் இல்லத்துக்கு அன்புமணி நேற்று வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. அவர்கள் இடையே சுமுக நிலையை ஏற்படுத்த கட்சி மூத்த நிர்வாகிகள், குடும்பத்தினர் மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்ததாக தெரிகிறது.
பாமகவில் கட்சி நிறுவனர் ராமதாஸ் – தலைவர் அன்புமணி இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. அன்புமணி ஆதரவாளர்களான பாமக பொருளாளர் திலகபாமா உட்பட 41 மாவட்ட நிர்வாகிகளை கட்சியில் இருந்து நீக்கி ராமதாஸ் உத்தரவிட்டார். அவர்களுக்கு மாற்றாக, தனது ஆதரவாளர்களை அந்த பொறுப்புகளில் நியமித்தார். அதேநேரத்தில், சென்னை சோழிங்கநல்லூரில் தனது ஆதரவாளர்களுடன் அன்புமணி தொடர்ந்து ஆலோசனை நடத்தி வந்தார். ராமதாஸால் நீக்கப்பட்ட நிர்வாகிகள் அதே பொறுப்புகளில் நீடிப்பார்கள் என்று அறிவித்த அன்புமணி, ‘‘உங்களை யாராலும் மாற்ற முடியாது. கட்சியின் தலைவருக்கு மட்டும்தான் அந்த அதிகாரம் உள்ளது’’ என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.