
புதுடெல்லி: உலக சுற்றுச்சூழல் தினம் நேற்று கடைப்பிடிக்கப்பட்டதை ஒட்டி ஆரவல்லி பசுமை சுவர் திட்டத்தை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். பசுமை காக்க "தாயின் பெயரில் ஒரு மரம் நடுவோம்" பிரச்சாரத்தையும் பிரதமர் முன்னெடுத்தார்.
ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டத்தின் (யுஎன்இபி) கீழ் 1973 முதல் ஆண்டுதோறும் ஜூன் 5 -ம் தேதி உலக சுற்றுச்சூழல் தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை உலகெங்கும் கொண்டு சேர்ப்பதற்கு இந்தநாள் மிகப்பெரிய தளத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.