
ஐ.பி.எல் முடிந்ததும் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி ஜூன் 20 முதல் ஆகஸ்ட் 4 வரை இங்கிலாந்தில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடத் திட்டமிடப்பட்டிருந்தது.
அதன்படி, இந்திய அணியில் இடம்பிடித்திருந்த வீரர்கள் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பாக இங்கிலாந்துக்கு புறப்பட்டுச் சென்று இங்கிலாந்து ஏ அணியுடன் ஆடத் தொடங்கிவிட்டனர்.
ஐபிஎல் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறியிருந்த அணிகளில் இடம்பெற்றிருந்த வீரர்கள் மட்டும் இங்கிலாந்துக்கு புறப்படாமல் இருந்தனர்.
நேற்று முன்தினத்தோடு (ஜூன் 3) இந்த ஆண்டு ஐபிஎல் சீசன் நிறைவுற்றதால், மீதமிருக்கும் வீரர்கள், பயிற்சியாளர்கள் இங்கிலாந்து புறப்படத் தயாராகிவிட்டனர்.
இந்த நிலையில், இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் சுப்மன் கில் ஆகியோர் மும்பையில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பங்கேற்றனர்.
அப்போது, பும்ரா குறித்து பேசிய கம்பீர், “போதுமான பந்துவீச்சாளர்களை நாங்கள் தேர்ந்தெடுத்திருக்கிறோம். எங்களின் வேகப்பந்துவீச்சாளர்கள் எந்த நிலையிலும் போட்டியை வெல்லக் கூடிய இடத்தில் இருக்கின்றனர்.

பும்ரா போன்ற ஒருவர் இருக்கும்போது, அவர் எத்தனை போட்டிகளில் விளையாடுகிறார் என்பதைப் பொறுத்து, எங்களுக்குச் சிறப்பாக இருக்கும்.
அதேசமயம், பும்ரா எந்த 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை. போட்டியின் முடிவுகள், தொடரின் போக்கு ஆகியவற்றைப் பொறுத்து அது இருக்கும்.
பும்ரா போன்ற ஒருவரை மாற்றுவது கடினம். இருப்பினும் எங்களிடம் திறமையான வீரர்கள் இருக்கிறார்கள்.
ஏற்கெனவே சாம்பியன்ஸ் டிராபியில் நான் சொன்னதுபோல, அது இன்னொரு வீரருக்கு வாய்ப்பளிக்கிறது.” என்று கூறினார்.
மேலும், தொடர்ந்து பேசிய கம்பீர், “நான் எப்போதும் அழுத்தத்தில் இருக்கிறேன். நியூசிலாந்து, ஆஸ்திரேலியா தொடர்களுக்குப் பிறகு அழுத்தத்தில் இருந்தேன்.
சாம்பியன்ஸ் டிராபிக்கு பிறகும் அழுத்தத்தில் இருந்தேன். முடிவுகள் எதுவாக இருந்தாலும் நான் அழுத்தத்தில் இருக்கிறேன்.
எனவே, ஒவ்வொரு சுற்றுப்பயணத்திலும் அழுத்தம் எப்போதும் இருக்கும்.” என்று கூறியவர் பிளெயிங் லெவன் குறித்து, “சுழற்பந்துவீச்சு ஆல்ரவுண்டராக இருந்தாலும் சரி, வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டராக இருந்தாலும் சரி, எங்களுக்குப் பலன் தரக்கூடிய சிறந்த பிளேயிங் லெவனுடன் நாங்கள் விளையாடுவோம்.
டெஸ்ட் போட்டிகளில் 20 விக்கெட்டுகளை வீழ்த்துவதன் மூலம் மட்டுமே வெற்றி பெற முடியும்.” என்று தெரிவித்தார்.

மேலும், ஸ்ரேயஸ் ஐயர் தேர்வாகாதது குறித்து கம்பீர், “ஃபார்மில் இருந்தால் யாரையும் நீங்கள் அழைக்கலாம்.
ஆனால், நாங்கள் 18 பேரை மட்டுமே தேர்வு செய்ய முடியும்.” என்று கூறியதைத் தொடர்ந்து கருண் நாயர் இடம்பெற்றது பற்றி பேசுகையில், “இது உள்ளூர் கிரிக்கெட்டுக்கே பெருமை. உள்ளூர் போட்டிகளில் ஆடிய வீரர்கள் இருப்பது எப்போதும் சிறந்தது.
அவர் இந்தியா-ஏ அணிக்காக இரட்டை சதம் அடித்திருக்கிறார் (இங்கிலாந்து ஏ அணிக்கெதிராக). இருப்பினும், ஒன்றிரண்டு ஆட்டங்களை வைத்து நாங்கள் மதிப்பிட மாட்டோம்.” என்றார்.