
ஐ.பி.எல் முடிந்ததும் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி ஜூன் 20 முதல் ஆகஸ்ட் 4 வரை இங்கிலாந்தில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடத் திட்டமிடப்பட்டிருந்தது.
அதன்படி, இந்திய அணியில் இடம்பிடித்திருந்த வீரர்கள் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பாக இங்கிலாந்துக்கு புறப்பட்டுச் சென்று இங்கிலாந்து ஏ அணியுடன் ஆடத் தொடங்கிவிட்டனர்.
ஐபிஎல் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறியிருந்த அணிகளில் இடம்பெற்றிருந்த வீரர்கள் மட்டும் இங்கிலாந்துக்கு புறப்படாமல் இருந்தனர்.
நேற்று முன்தினத்தோடு (ஜூன் 3) இந்த ஆண்டு ஐபிஎல் சீசன் நிறைவுற்றதால், மீதமிருக்கும் வீரர்கள், பயிற்சியாளர்கள் இங்கிலாந்து புறப்படத் தயாராகிவிட்டனர்.
இந்த நிலையில், இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் சுப்மன் கில் ஆகியோர் மும்பையில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பங்கேற்றனர்.
அப்போது பேசிய கில், “எனக்கு கேப்டன் பதவி வழங்கப்பட்டபோது நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.
கேப்டன்சியில் எனக்கென்று எந்தவொரு குறிப்பிட்ட பாணியும் இல்லை. அதிக அனுபவம் கிடைக்கும்போது, எனது பாணி வெளிப்படும்.
வீரர்களுடன் தொடர்பு கொள்வதும், அவர்களுடன் பேசுவதும் எனக்குப் பிடிக்கும்.

பேட்டிங் ஆர்டர்
வீரர்களுக்கிடையே ஒரு பிணைப்பை ஏற்படுத்த விரும்புகிறேன். அது மிகவும் முக்கியம். வீரர்களின் பலவீனத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்.
அவர்கள் பாதுகாப்பாக உணர்ந்தால் தங்களின் 100 சதவிகித ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள். பேட்டிங் பொசிஷன் இன்னும் முடிவாகவில்லை.
நாங்கள் அணிக்குள்ளேயே போட்டியில் விளையாடுவோம். லண்டனில் 10 நாள்கள் கேம்ப். எனவே, அங்கு செல்லும்போது பேட்டிங் ஆர்டரை முடிவு செய்வோம்.” என்று கூறினார்.

மேலும், ரோஹித் மற்றும் கோலி இல்லாதது குறித்து பேசுகையில், “ஒவ்வொரு சுற்றுப்பயணத்திலும் அழுத்தம் எப்போதும் இருக்கும். நிச்சயம், இவ்வளவு காலம் விளையாடி பல முறை வென்ற இரண்டு அனுபவம் வாய்ந்த வீரர்களின் இடத்தை நிரப்புவது மிகவும் கடினம். இருந்தாலும் இது வேறுமாதிரியான அழுத்தம் அல்ல. நாங்கள் அனைவரும் அதற்குப் பழகிவிட்டோம்.” என்று கில் தெரிவித்தார்.