• June 5, 2025
  • NewsEditor
  • 0

வெள்ளிக் கிழமை, ஜூன் 6 அரசு விடுமுறையா? இணையத்தில் பலர் நாளை விடுமுறை என்றும், நாடுமுழுவதும் அரசு நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் பள்ளிகள் கூட மூடப்படும் என்றும் பகிர்ந்துள்ளனர்.

இந்த பதிவுகளால் பலரும் குழப்பமடைந்துள்ளனர். முக்கியமாக பக்ரீத் என்றும் அழைக்கப்படும் ஈத் அல்-அதா எப்போது கொண்டாடப்படுகிறது என்பதில் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.

பக்ரீத் உலகம் முழுவதுமுள்ள இஸ்லாமியர்களால், இஸ்லாமிய மாதம் துல் ஹஜ்ஜாத்தின் 10வது நாளில் கொண்டாடப்படுகிறது.

சமூக வலைதளங்களில் பரவும் பொய்!

சமூக வலைதள பதிவு ஒன்று, நாளை நாடுமுழுவதும் பொது விடுமுறை எனக் கூறுகிறது.

மற்றொரு பதிவில், மத்திய அரசு அலுவலகங்களுக்கும் பெரும்பான்மையான மாநிலங்களிலும் விடுமுறை எனக் கூறப்படுகிறது.

ஒருபடி மேலே சென்று ஐ.எஸ்.ஹெச் என்ற யூடியூப் சேனல், மக்களின் மன நலனுக்கு ஆதரவளிப்பதற்காக அரசு வெள்ளிக்கிழமை விடுமுறை அளித்ததாகக் கூறியது. சிலர் வானியல் நிகழ்வு காரணமாக வெள்ளி அன்று விடுமுறை என்றும் கூறுகின்றனர்.

இந்த தவறான தகவலைப் பரப்ப பிரதமர் மோடி மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாரமனின் புகைப்படங்களைப் பயன்படுத்துகின்றனர்.

இந்த பதிவுகளால் குழப்பமடைந்த மக்கள் கோர்க், சேட் ஜிபிடி போன்ற ஏஐ-களைக் குறிப்பிட்டுக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

உண்மை என்ன?

ஜூன் 6 வெள்ளிக்கிழமை அரசு விடுமுறை எனக் கூறப்படுவது முற்றிலும் தவறான ஒன்று. மத்திய அரசு எந்த விடுமுறையையும் அறிவிக்கவில்லை.

ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ வங்கி விடுமுறை நாட்குறிப்பின் படி, பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் மற்றும் கொச்சி நகரங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் வங்கிகள் ஜூன் 6ம் தேதி மூடப்பட்டிருக்கும். மேலும் கேரள அரசு அந்த நாளில் பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவித்துள்ளது.

பிற மாநிலங்களில் பள்ளிகள், வங்கிகள், அரசு நிறுவனங்கள் வழக்கம்போல செயல்படும்.

நாடுமுழுவதும் பக்ரீத் விடுமுறை எப்போது?

பக்ரீத் ஜூன் 7ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனால் அந்த நாள் மாதத்தின் முதல் சனிக்கிழமையாக இருந்தாலும் நாடுமுழுவதும் வங்கிகளுக்கு விடுமுறை. ஆனால் அஹமதாபாத், கங்டாக், இட்டாநகர், கொச்சி மற்றும் திருவனந்தபுரம் நகரங்களில் உள்ள வங்கிகள் மட்டும் செயல்படும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *