
திருச்சி, ஸ்ரீரங்கம், புலிமண்டபம் ரோடு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வசித்து வந்தவர் நாகராஜன் (வயது: 59). இவர் சமையல் மாஸ்டராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. இந்நிலையில், இவருக்கு சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்கள் இருந்து வந்துள்ளது. இந்த சூழலில், அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து துர்நாற்றம் வீசி உள்ளது. அருகில் இருந்தவர்கள் பார்த்தபோது நாகராஜன் வசித்த வீடு பூட்டி கிடந்தது. இந் நிலையில் அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் அடிப்படையில் ஸ்ரீரங்கம் காவல் நிலைய போலீஸார் அடுக்குமாடி குடியிருப்புக்கு விரைந்து சென்று நாகராஜனின் வீட்டை திறந்து பார்த்தனர். அப்போது, அங்கு நாகராஜன் அழுகிய நிலையில் இறந்து கிடந்தார்.
உடனே, அவரது உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இறந்து போன நாகராஜனின் நண்பர் ராஜா கொடுத்த புகாரின் அடிப்படையில் ஸ்ரீரங்கம் காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், நாகராஜன் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது இயற்கை மரணமா என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் சமையல் மாஸ்டர் மர்மமாக இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.