
விழுப்புரம்: பாமக நிறுவனர் ராமதாஸ் வசிக்கும் தைலாபுரம் தோட்டத்துக்கு அன்புமணி, ஆடிட்டர் குருமூர்த்தி, சைதை துரைசாமி ஆகியோர் இன்று (ஜூன் 5) ஓரே நாளில் வருகை புரிந்ததால் தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
பாமகவில் ‘யார் அதிகாரமிக்கவர்’ என்ற போட்டி அரசியல் நிலவுகிறது. பாமக நிறுவனரான ராமதாஸ், தலைவர் என கூறிக்கொள்ளும் அவரது மகன் அன்புமணி ஆகியோருக்கு இடையே பாமகவும், அக்கட்சியின் தொண்டர்களும் சிக்கி தவிக்கின்றனர். இவர்கள் இருவரும் தனித்தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர். இவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் கவுரவத் தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்ட முன்னணி நிர்வாகிகளும், குடும்பத்து உறுப்பினர்களும் ஈடுபட்டுள்ளனர். சுமுக முடிவு எட்ட பாஜகவும் களம் இறங்கியது.